- ஹொய்ஸ்லாக்
- சென்னகேஸ்வரர் கோயில்
- சோமநாதபுரம், கர்நாடகா
- திரு.
- சோம்நாட்டரல்
- மன்னர் ஹொய்சலா மூன்றாம் நரசிம்மர்
- மைசூர்
- கர்நாடக
- காவிரி ஆறு
சிற்பமும் சிறப்பும்
ஆலயம்: சென்னகேசவர் கோயில்,
சோமநாதபுரம், கர்நாடகா.
காலம்: ஹோய்சாள மன்னர் மூன்றாம் நரசிம்மரின் தளபதியான சோமநாதரால் பொ.ஆ.1268-ல் கட்டி முடிக்கப்பட்டது.
கர்நாடக மாநிலத்தின் கலாச்சாரத் தலைநகரான மைசூருக்கு அருகில், காவிரி ஆற்றின் கரையில் அமைந்துள்ளது `சோமநாதபுரா’ எனும் சிறிய கிராமம். இந்த கிராமம், ஹோய்சாளக் கட்டடக்கலையின் மிகச் சிறந்த அடையாளங்களில் ஒன்றான கேசவர் கோயிலுக்காக உலகப்புகழ்பெற்றது. பேலூர் மற்றும் ஹளேபேடுவில் உள்ள ஹோய்சாளர் கோயில்களைப் போலவே, சோமநாதபுராவில் உள்ள இந்தக் கோயிலும் காண்போர் கண்களுக்கு ஒரு மாபெரும் கலை விருந்தாகத் திகழ்கிறது.
வரலாற்றுப் பின்னணி
இந்தக் கோயில் பொ.ஆ.1268-ஆம் ஆண்டு, ஹோய்சாள மன்னர் மூன்றாம் நரசிம்மனின் தளபதியான சோமநாத தண்டநாயகரால் கட்டப்பட்டது. அவர் தனது பெயரிலேயே இந்த ஊரை நிறுவி, இந்தக் கலைப் பொக்கிஷத்தை உருவாக்கினார். ஹோய்சாள வம்சத்தின் செழுமையான மற்றும் விரிவான அலங்கார வேலைப்பாடுகளுடன் கூடிய கடைசி முக்கியக் கோயிலாக சோமநாதபுரா கருதப்படுகிறது.
வெளிப்புறச் சுவர் சிற்பங்கள்
கோயிலின் வெளிப்புறச் சுவர்கள் பல கிடைமட்ட அடுக்குகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொன்றும் ஒரு சிறப்பம் சத்தைக் கொண்டுள்ளன:
யானைகள்: வலிமையின் அடையாளமாகச் செதுக்கப்பட்டுள்ளன.
சிங்கங்கள்: தைரியத்தைப் பறைசாற்றுகின்றன.
குதிரைகள்: வேகத்தைக் குறிக்கின்றன.
சிறிய கோபுரங்கள்: சுவர்களில் வரிசையாகச் செதுக்கப்பட்டுள்ள சிறிய கோயில் மாதிரிகள் அதன் அழகைக் கூட்டுகின்றன.
தெய்வங்களின் உருவங்கள்:
இந்தக் கோயிலில் விஷ்ணுவின் பல்வேறு அவதாரங்கள் மற்றும் இந்து தெய்வங்களின் சிற்பங்கள் மிக நுணுக்கமாகச் செதுக்கப்பட்டுள்ளன.
விஷ்ணுவின் அவதாரங்கள்:
மச்ச, கூர்ம மற்றும் வராக அவதாரங்கள் தனித்துவமான வடிவங்களில் காட்சியளிக்கின்றன.
அலங்கார வேலைப்பாடுகள்:
தெய்வங்கள் அணிந்துள்ள ஆபரணங்கள், மாலைகள், கிரீடங்கள் மற்றும் காலணிகள் (தண்டை) வரை அனைத்தும் மிகத் துல்லியமாகச் செதுக்கப்பட்டுள்ளன.
புராணக் காட்சிகள்:
ராமாயணம், மகாபாரதம் மற்றும் பாகவத புராணத்தின் முக்கியக் காட்சிகள், குறிப்பாகக் கண்ணனின் லீலைகள் சுவர்களில் சித்திரங்களாக விரிகின்றன. கோயிலின் ஒவ்வொரு மூலையிலும், சுவர்களின் ஒவ்வொரு வளைவிலும் இசைக் கலைஞர்கள், நடன மங்கையர் மற்றும் புராணக் கதைகளின் காட்சிகள் நிறைந்துள்ளன.
மூன்று கருவறைகள் (திரிகூடா)
இக்கோயிலில் மகாவிஷ்ணுவின் வெவ்வேறு வடிவங்களுக்கு மூன்று கருவறைகள் உள்ளன:
* கேசவர்
* ஜனார்த்தனர்
* வேணுகோபாலர்
மிகவும் வருத்தத்திற்குரிய விஷயம் என்னவென்றால், டெல்லி சுல்தான்களின் படையெடுப்பினால் இந்த அழகான சிற்பங்கள் பல இடங்களில் சேதமடைந்துள்ளதால் (பின்னப்பட்டு இருப்பதால்), ஆகம விதிகளின்படி இங்கு தற்போது வழிபாடுகள் எதுவும் நடைபெறுவதில்லை. சோமநாதபுரா கேசவர் கோயில், வெறும் கற்களால் ஆன கட்டடம் மட்டுமல்ல; அது அக்கால சிற்பக்கலைஞர்களின் ஈடு இணையற்ற கற்பனைத் திறனுக்கும், உழைப்பிற்கும் காலத்தால் அழியாத ஒரு சான்றாகும்.
மது ஜெகதீஷ்
