காதலனுக்கு வேறு பெண்ணுடன் நடக்க இருந்த திருமணத்தை தடுத்து நிறுத்திய காதலி

அண்ணாநகர், மார்ச் 6: திருவள்ளூர் அடுத்த திருவாலங்காடு பகுதியை சேர்ந்தவர் கணேசன் (30). வில்லிவாக்கத்தில் காய்கறி கடை நடத்தி வருகிறார். இவர், மின்சார ரயிலில் சென்று வரும்போது, அரக்கோணம் பகுதியை சேர்ந்த 30 வயது இளம்பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டது. இது, நாளடைவில் காதலாக மாறியது. அவ்வப்போது இருவரும் செல்போனில் பேசியும், அடிக்கடி தனிமையில் சந்தித்தும் காதலை வளர்த்து வந்துள்ளனர். இந்நிலையில், கணேசனுக்கு வேறொரு பெண்ணுடன் திருமணம் நிச்சயம் செய்யப்பட்டது. வில்லிவாக்கத்தில்  அதற்கான ஏற்பாடுகளை இருதரப்பு பெற்றோரும் தடபுடலாக செய்து வந்தனர்.

திட்டமிட்டபடி நேற்று முன்தினம் இரவு திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடந்தது. நேற்று காலை திருமணம் நடைபெற இருந்தது. அதற்கான வேலைகளும் நடந்து கொண்டிருந்தது. இதுபற்றி அறிந்த காதலி உடனே, வில்லிவாக்கம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில், போலீசார், அந்த இளம்பெண்ணுடன் நேற்று காலை திருமண மண்டபத்துக்கு சென்றனர். அங்கிருந்த கணேசனின் உறவினர்களிடம், அவரது காதல் விவகாரத்தை இளம்பெண் தெரிவித்தார். மேலும் கணேசனுடன் நெருக்கமாக இருந்த புகைப்படங்களையும் அந்த இளம்பெண் காட்டினார்.

இதையடுத்து திருமணத்தை நிறுத்திய போலீசார், இரு வீட்டாரையும் காவல் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரித்தனர். அப்போது கணேசன், காதலியை திருமணம் செய்ய மறுத்துள்ளார். காதலி அரக்கோணத்தை சேர்ந்தவர் என்பதால், இந்த வழக்கை, வில்லிவாக்கம் அனைத்து மகளிர் போலீசார், அரகோணம் போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

Related Stories: