பறக்கும் படை சோதனையில் ரூ.12 லட்சம் சிக்கியது

காஞ்சிபுரம், மார்ச் 6: தேர்தல் நன்னடத்தை விதிகள் அமலில் உள்ளதால்  தேர்தல் பறக்கும் படையினர்  காஞ்சிபுரம் மாவட்டத்தின் நுழைவாயில் பகுதிகளில் நேற்று  அதிகாலை முதல் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, ஸ்ரீபெரும்புதூர் அடுத்த சோமங்கலம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் ஆட்டோவில் கொண்டு வந்த ரூ.4.35 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. அதேபோல் காஞ்சிபுரம் கீழம்பி பகுதியில் வட்டாட்சியர் ரமணி தலைமையில் தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது உரிய ஆவணங்களின்றி எடுத்து வந்த ரூ. 4 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும், வட்டாட்சியர் அகிலா தலைமையில் கர்நாடக மாநிலத்தில் இருந்து வந்த காரை  சோதனை செய்தபோது, உரிய ஆவணங்கள் இல்லாமல் ரூ.3.7 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. பறிமுதல் செய்யப்பட்ட பணம், காஞ்சிபுரம் ஆர்டிஓ அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டது.

காஞ்சிபுரத்தில், நேற்று நடந்த பறக்கும்படை வாகன சோதனையில் ரூ.12.5 லட்சரம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. கர்நாடகாவில் இருந்து பட்டு சேலை எடுக்க அதிகளவில் காஞ்சிபுரம் வருபவர்கள் போதிய ஆவணங்கள் இன்றி பணம் எடுத்து வருகின்றனர். காஞ்சிபுரத்தில் உள்ள பட்டுச்சேலை கடை உரிமையாளர்கள் பணம் கொண்டு வந்து பொருட்களை கொள்முதல் செய்பவர்களுக்கு, அதிகளவில் தள்ளுபடி வழங்குவதால், மின்னணு பணப் பரிமாற்றம் மற்றும் ஆன்லைன் பண பரிமாற்றத்தை தவிர்க்க வேண்டும்  என அறிவுறுத்துவதாக குற்றச்சாட்டுகளும்  எழுந்துள்ளது.

Related Stories: