அரியலூர், ஜூன் 4: உலக சுற்றுச்சூழல் தினத்தன்று 201 ஊராட்சிகளில் கிராம சபை கூட்டம் நாளை 5ம்தேதி நடக்கிறது மாவட்ட கலெக்டர் தகவல் தெரிவித்துள்ளார். அரியலூர் மாவட்டத்தில் உள்ள 201 ஊராட்சிகளிலும் நாளை 5ம்தேதி உலக சுற்றுச்சூழல் தினத்தன்று சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெறவுள்ளது. கிராம ஊராட்சிகளில் திடக்கழிவு மேலாண்மையில் ஈடுபடும் உறுப்பினர்களுக்கு திடக்கழிவு மேலாண்மை விதிகள் 2026 குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துதல்.
திடக்கழிவு மேலாண்மை குறித்த செயல்பாட்டினை கிராம ஊராட்சிகள் சுயமாக மதிப்பீடு செய்வதற்கும் சரி பார்ப்பதற்கும் வழிவகை செய்தல். “சுற்றுச் சூழலுக்கான வாழ்க்கை முறை” கருப்பொருள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தி நிலையான நடைமுறைகளை ஊக்குவித்தல் மற்றும் திடக்கழிவு மேலாண்மை குறித்த முறையான செயல்பாடு மற்றும் பராமரிப்பை உறுதி செய்வதற்கும், சம்பூர்ண ஸ்வச்சதா மற்றும் திறந்தவெளி மலம் கழித்தல் இல்லாத கிராமங்கள் மீதான அர்ப்பணிப்பை வலியுறுத்துவதற்கு சமூகங்களை ஒன்றிணைத்தல் குறித்து விவாதிக்கப்பட உள்ளது.
எனவே, மேற்காணும் கிராம சபை கூட்டத்தில் அந்தந்த பகுதிகளில் உள்ள தன்னார்வலர்கள், சமுதாய அமைப்பு உறுப்பினர்கள், மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு முழு ஒத்துழைப்பு வழங்குமாறு கலெக்டர் மிருணாளினி தெரிவித்துள்ளார்.
