சீர்காழி, ஜூன் 4: சீர்காழி அருகே வைத்தீஸ்வரன் கோவிலில் கோவிலார் வாய்க்கால் தூர்வார வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே வைத்தீஸ்வரன் கோவிலில் கோயிலார் வாய்க்கால் செல்கிறது. இந்த வாய்க்கால் பாசனத்திற்கும் வடிகாலாகவும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த வாய்க்காலில் கடந்த சில ஆண்டுகளாக ஆகாய தாமரைகள் மற்றும் செடி கொடிகள் மண்டி காணப்படுகிறது. இதனால் வாய்க்கால் இருக்கும் சுவடு தெரியாமல் இருந்து வருகிறது.
வாய்க்கால் முழுவதும் செடி கொடிகள் மண்டி கிடப்பதால் தண்ணீர் சரிவர செல்வதில்லை என விவசாயிகள் குற்றம்சாட்டி வருகின்றனர். குறிப்பாக மழைக் காலங்களில் மழைநீர் வடியாமல் வயல் பகுதிகளிலும் குடியிருப்பு பகுதிகளிலும் தண்ணீர் புகுந்து விடுவதாக விவசாயிகள் கவலையுடன் தெரிகின்றனர். இதனால் ஆண்டு தோறும் விவசாயிகள் பொதுமக்கள் சிரமப்பட்டு வருகின்றனர்.
மேலும் இந்த வாய்க்காலில் கழிவுநீர் அதிக அளவில் திறந்து விடப்படுவதால் துர்நாற்றம் வீசி வருகிறது. இதனால் அந்த பகுதியில் தொற்று நோய் ஏற்படும் அபாயம் எழுந்துள்ளது. எனே பொதுமக்களின் நலன் கருதி வாய்க்காலை முழுமையாக தூர்வார வேண்டும். ஆக்கிரமப்புகளை அகற்ற வேண்டும். கழிவு நீர் வாய்க்காலில் விடுவதை தடுக்க வேண்டும் என விவசாயிகள் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
