திருவள்ளூர், மார்ச் 5: திருவள்ளூர் அடுத்த மேல்நல்லாத்தூர் ஊராட்சியில், பஸ் நிறுத்தத்தில் இருந்த நிழற்குடை இரவோடு இரவாக மாயம் இதனால் மக்கள் அதிர்ச்சியடைந்தனர். திருவள்ளூர் - பெரும்புதூர் நெடுஞ்சாலையில் மேல்நல்லாத்தூர் ஊராட்சி அமைந்துள்ளது. இங்குள்ள தனியார் தொழிற்சாலையின் இருபுறங்களிலும் பஸ் நிறுத்தம் உள்ளது. இங்கிருந்து வியாபாரம், பள்ளி, கல்லூரி, வேலை உள்பட பல்வேறு தேவைகளுக்கு பொதுமக்கள் திருவள்ளூர், பூந்தமல்லி, பெரும்புதூர், ஆவடி, காஞ்சிபுரம் உள்பட பல பகுதிகளுக்கு சென்று வருகின்றனர். இந்நிலையில், மேல்நல்லாத்தூர் பஸ் நிறுத்தத்தில் எதிரெதிரே இருந்த பயணிகள் நிழற்குடைகள் இரவோடு இரவாக மாயமாகிவிட்டது. இதை கண்டு அப்பகுதி மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். இதனை யார் கொண்டு சென்றனர் எனவும் கேள்வி எழுப்புகின்றனர்.