பெற்றோர் இறந்த துக்கத்தில் மகள் தற்கொலை முயற்சி

ஆவடி, மார்ச் 5: பெற்றோர் இறந்த விரக்தியில் மகள் தற்கொலை முயற்சித்தார். இச்சம்பவம், ஆவடி பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. ஆவடியை அடுத்த மிட்டனமல்லி, வள்ளுவர் தெருவை சேர்ந்தவர் வர்க்கீஸ் (53). ஆவடி மத்திய ரிசர்வ் போலீஸ் படையில் ஏட்டாக பணியாற்றினார். இவரது மனைவி ஜெர்சம்மாள். இவர்களது மகள் ஆஸ்பி (19), மகன் அமிர்தஜன் (24). கடந்த மாதம் 16ம் தேதி மதியம் வர்க்கீஸ், மனைவி, மகனுடன் வீட்டில் சாம்பார் சாதத்துடன், பீன்ஸ், கேரட் பொரியல் சாப்பிட்டார். அவரது, மகள் ஆஸ்பிக்கு, உடல் நிலை சரியில்லாமல் இருந்ததால், அவருக்கு சாம்பார் சாதம் சாப்பிடவில்லை. அதற்கு பதிலாக, அவர் தயிர் சாதம் சாப்பிட்டதாக கூறப்படுகிறது.

அன்று, மாலை அவர்கள் மூவரும், திடீரென வாந்தி எடுத்து மயங்கி விழுந்தனர். இதனை பார்த்த, அக்கம் பக்கத்தினர் அவர்களை மீட்டு போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி வர்க்கீஸ் 18ம் தேதியும், அடுத்தநாள் ஜெர்சம்மாளும் இறந்தனர்.  மகன் அமிர்தஜன் சமீபத்தில் சிகிச்சை முடிந்து வீடு  திரும்பினார். பெற்றோர் இறந்ததால், மகள் ஆஸ்பி விரக்தியில் இருந்தார். இந்நிலையில், நேற்று காலை  ஆஸ்பி, வீட்டில் தூக்கிட்டு தற்கொலை முயற்சிக்கு ஈடுபட்டார். இதை பார்த்த அக்கம்பக்கத்தினர், அவரை மீட்டு அம்பத்தூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. அவரது உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்தனர். புகாரின்படி முத்தாபுதுப்பேட்டை இன்ஸ்பெக்டர் சீனிவாசன் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கிறார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தியது.

Related Stories: