சென்னை, மார்ச் 5: வீட்டில் தனியாக தூங்கிய 75 வயது மூதாட்டியை, கஞ்சா போதையில் பலாத்காரம் செய்து, அடித்து கொலை செய்த வாலிபரை போலீசார் கைது செய்தனர். ராயப்பட்டை ரோட்டரி நகர் 3வது தெருவை சேர்ந்தவர் ஆதிலட்சுமி (75). திருமணம் ஆகாத இவர், தனியாக வசித்து வந்தார். நேற்று காலை ஆதிலட்சுமி நீண்ட நேரமாகியும் வெளியே வரவில்லை. இதனால் சந்தேகமடைந்த அக்கம் பக்கத்தினர் அவரது வீட்டிற்கு சென்று பார்த்தனர். அப்போது, அவர் ரத்த வெள்ளத்தில் தலையில் பலத்த காயத்துடன் இறந்து கிடந்தது தெரியவந்தது. உடனே இதுபற்றி ராயப்பேட்டை போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். விரைந்து வந்த போலீசார், உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து, சிசிடிவி பதிவுகளை பெற்று விசாரணை நடத்தினர். அதில், திருவல்லிக்கேணி நொச்சி குப்பத்தை சேர்ந்த வசந்த்குமார் (21), மூதாட்டி வீட்டிற்கு வந்து சென்றது தெரியவந்தது. அவரை பிடித்து, விசாரணை நடத்தியபோது, கஞ்சா போதையில் மூதாட்டியை பலாத்காரம் செய்து கொலை செய்ததாக ஒப்புக்கொண்டார்.