மேற்குவங்க பா.ஜ அரசுக்கு எதிராக மம்தா தர்ணா போராட்டம்: 5 எம்எல்ஏ, 3 எம்பிக்கள் மட்டுமே பங்கேற்றதால் பரபரப்பு

கொல்கத்தா: மேற்குவங்க பா.ஜ அரசுக்கு எதிராக மம்தா நடத்திய தர்ணா போராட்டத்தில் 5 எம்எல்ஏ மற்றும் 3 எம்பிக்கள் மட்டுமே பங்கேற்றதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மேற்குவங்கத்தில் நடந்த தேர்தலில் பா.ஜ வெற்றி பெற்று புதிய முதல்வராக சுவேந்து அதிகாரி பதவி ஏற்ற பிறகு திரிணாமுல் காங்கிரஸ் தலைவர்கள் தாக்கப்படுவதை கண்டித்து முன்னாள் முதல்வர் மம்தா பானர்ஜி நேற்று தர்ணா போராட்டம் நடத்தினார். மத்திய கொல்கத்தாவில் மம்தா நடத்திய இந்த தர்ணா போராட்டத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 80 சட்டமன்ற உறுப்பினர்களில் 5 பேர் மட்டுமே கலந்துகொண்டனர். மேலும் 3 எம்பிக்கள் மட்டுமே பங்கேற்றதால் பரபரப்பு ஏற்பட்டது. நேற்று முன்தினம் மம்தா தனது இல்லத்தில் கூட்டிய எம்எல்ஏக்கள் கூட்டத்தை 60 பேர் புறக்கணித்தனர்.

ஏற்கனவே, 100-க்கும் மேற்பட்ட கவுன்சிலர்கள் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகிவிட்டனர். திரிணாமுல் தலைமை மீதும், குறிப்பாக அபிஷேக் மீதும் அதிருப்தி தெரிவித்து, பல நாடாளுமன்ற உறுப்பினர்களும் கட்சியின் முக்கியப் பொறுப்புகளிலிருந்து விலகியுள்ளனர். இவர்களில் திரிணாமுல் நாடாளுமன்ற உறுப்பினர் ககோலி கோஷ் தஸ்திதார் முக்கியமானவர். இதனால் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் மிகப்பெரிய விரிசல் ஏற்பட்டுள்ளது.

திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் நடக்கும் இந்தக் கிளர்ச்சிக்கு முன்னின்று தலைமை தாங்குபவர், அனுபவம் வாய்ந்த மூத்த அரசியல்வாதியான ரிதப்ரதா என்று கூறப்படுகிறது. இந்திய மாணவர் சங்கத்தின் தலைவராக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் தனது அரசியல் வாழ்க்கையை தொடங்கினார். 2017-ஆம் ஆண்டில் அக்கட்சியிலிருந்து நீக்கப்பட்டார்.அதன் பிறகு, 2020-ஆம் ஆண்டில் அவர் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார்.

Related Stories: