வாகன பரிசோதனையில் பணம் பறிமுதலால் வியாபாரிகள் பாதிப்பு

சிவகங்கை, மார்ச் 5:  சட்டமன்ற தேர்தலையொட்டி நடந்துவரும் வாகன பரிசோதனையால் வியாபாரிகள் பொருட்கள் வாங்க வெளியூர்களுக்கு செல்வதில் பிரச்னை ஏற்படும் என அச்சமடைந்துள்ளனர். தமிழகம் முழுவதும் வருகிற ஏப்.6ல் ஒரே கட்டமாக சட்டமன்ற தேர்தல் நடக்க உள்ளது. இதற்கான அறிவிப்பு பிப்.26ல் வெளியானதை தொடர்ந்து தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்தன. பல்வேறு நடத்தை விதிகள் இருந்தாலும் வாகன பரிசோதனையில் தேர்தல் கமிஷன் தீவிர கவனம் செலுத்தி வருகிறது. வாகனங்கள் மூலமாக எடுத்துச் செல்லப்பட்டு பணப்பட்டுவாடா செய்யப்படுவதை தடுக்க சிவகங்கை மாவட்டத்தில் உள்ள செக்போஸ்ட்களில் பகல் மற்றும் இரவு நேரங்களில் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

மாவட்டத்தில் சிவகங்கையில் 3, மானாமதுரை 2, காரைக்குடி 3, தேவகோட்டை 2, திருப்பத்தூரில் 3 என மொத்தம் 13 செக்போஸ்டுகள் உள்ளன. டூவீலர், கார், வேன், லாரி உள்ளிட்ட தனியார் வாகனங்கள் பகல் நேரங்களிலும், இரவு நேரங்களிலும் பரிசோதனை செய்யப்பட்டு வருகின்றன. சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களில் மளிகை, அரிசி, காய்கறிகள், இரும்பு பொருட்கள், ஸ்டேசனரி, பூ, பாத்திரங்கள் உள்ளிட்ட பல்வேறு கடைகள் நடத்துபவர்கள் மதுரை உள்பட வெளி மாவட்டங்களிலேயே பொருட்கள் கொள்முதல் செய்கின்றனர்.

கொள்முதல் செய்யும் பொருட்களுக்கான பணத்தை வியாபாரிகளில் பெரும்பாலானோர் நேரடியாக கொண்டு செல்கின்றனர். வங்கி மூலம் பரிமாற்றம் செய்வது கிடையாது. சொந்தமான அல்லது வாடகை சரக்கு வாகனங்கள், கார்களில் சென்று பொருட்களை கொள்முதல் செய்வது வழக்கம். இந்நிலையில் ரூ.50ஆயிரம் வரை மட்டுமே பணம் கொண்டு செல்லலாம். அதற்கு மேல் கொண்டு சென்றால் உரிய ஆவணங்கள் வைத்திருக்க வேண்டும் என தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. வியாபாரிகள் பணம் கொண்டு செல்லும்போது அதற்கான ஆவணங்களை வைத்திருக்க முடியாது. இதனால் அவர்கள் பெரிதும் பாதிக்கப்படும் நிலை உள்ளது.

வியாபாரிகள் கூறியதாவது, கடைகளில் வியாபாரம் முடித்துவிட்டு பணத்தை எடுத்துக்கொண்டு பொருட்கள் கொள்முதல் செல்வோம். இதற்கு எந்த ஆவணத்தை கொண்டு செல்வது. யாரிடமாவது கடன் பெற்று சென்றால் அந்த பணத்திற்கு எந்த ஆவணம் இருக்கும். வியாபார பணத்தை வங்கியில் செலுத்தி மீண்டும் அதை எடுத்துச் சென்றால் மட்டுமே ஆவணம் கொண்டு செல்ல முடியும். பணத்தை பறிமுதல் செய்து கொண்டு ஏதேனும் ஆவணம் கொண்டு வந்தால் மட்டுமே மீண்டும் வழங்குகின்றனர். இதனால் தேவையற்ற குழப்பம் ஏற்படுகிறது.  கடந்த சட்டமன்ற தேர்தல், மக்களவை தேர்தல்களில் வியாபாரிகள்தான் அதிகம் பாதிக்கப்பட்டோம். அரசியல் கட்சிகளுக்காக செயல்படுத்தப்படும் நன்னடத்தை விதிமுறைகளால் வியாபாரிகள் கடுமையாக பாதிக்கப்படுகிறோம். எனவே வியாபாரிகள் பாதிக்கப்படாத வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

Related Stories: