பரமக்குடி, மார்ச் 5: தமிழகத்தில் ஏப். 6ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதனையடுத்து தேர்தல் நடைமுறைகள் அமல்படுத்தப்பட்டுள்ளது. ஆவணங்கள் இன்றி ரூ.50 ஆயிரத்துக்கு மேல் பணம் எடுத்துச் செல்லக்கூடாது என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. ஒவ்வொரு சட்டமன்ற தொகுதிக்கும் 3 பறக்கும் படை அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் பரமக்குடி அருகே பார்த்திபனூரில் சோதனை சாவடியில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது கடலூர் மாவட்டத்திலிருந்து பரமக்குடி ஆட்டுச்சந்தை ஆடுகளை வாங்க வந்த வியாபாரிகளின் வாகனத்தை சோதனையிட்ட போது அதில் உரிய ஆவணங்கள் இன்றி எடுத்துச் செல்லப்பட்ட தொகை 5 லட்சத்து 65 ஆயிரத்து 300 ரூபாய் பணத்தை தேர்தல் பறக்கும் படை அதிகாரி முத்துக்குமார் தலைமையிலான அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.