- CPCL
- மணாலி
- பொன்னேரி நெடுஞ்சாலை
- சென்னை
- மணாலி மண்டலம்
- சிபிசிஎல் கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனம்
- ஒன்றிய மாநிலம்
மணலி: சென்னை மணலி மண்டலத்துக்கு உட்பட்ட பொன்னேரி நெடுஞ்சாலையில் மாநகர பேருந்து, டிரெய்லர் லாரிகள் மற்றும் கார், பைக்குகள் என தினமும் பல்லாயிரக்கணக்கான வாகனங்கள் சென்றுவருகின்றன. இங்குள்ள ஒன்றிய அரசின் சிபிசிஎல் கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனத்தில் இருந்து உற்பத்தி பொருட்களை எடுத்துச்செல்ல கையாளப்படும் லாரிகள் நிறுவனம் அருகே சாலையோரத்தில் அங்குமிங்கும் நிறுத்தப்படுவதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு மக்கள் தொடர்ந்து தவித்து வருகின்றனர். அடிக்கடி விபத்துகள் ஏற்படுகிறது.
சாலையோரம் நிறுத்தப்படும் லாரிகளுக்கு அவ்வப்போது போக்குவரத்து அபராதம் விதித்தாலும் லாரிகள் நிறுத்த வசதியில்லை என்பதால் சாலையோரங்களில் நிறுத்துவதை கட்டுப்படுத்துவதில் போக்குவரத்து போலீசாருக்கு பெரும் சவாலாகவே உள்ளது. இதனால் பொன்னேரி நெடுஞ்சாலையில் நிறுத்தப்படும் லாரிகளால் போக்குவரத்து நெரிசலை தடுக்க லாரி நிறுத்த மையம் அமைக்க சென்னை மாநகராட்சி திட்டமிட்டு கடந்தாண்டு மணலி மண்டல செயற்பொறியாளர் தேவேந்திரன் தலைமையில் மண்டல குழு தலைவர் ஏ.வி.ஆறுமுகம் முன்மொழிந்த தீர்மானத்தில் அடிப்படையில் சிபிசிஎல் நிறுவன தலைமை அதிகாரிகள் இதற்கான திட்ட வரைவுகளை தயார் செய்தனர்.
இதன்படி, மணலி மண்டல அலுவலகம் அருகாமையில் சிபிசிஎல் நிறுவன சிஎஸ்ஆர் நிதி ரூ.10 கோடி மதிப்பீட்டில் ஒரே நேரத்தில் 200 லாரிகள் நிறுத்தும் வகையில் வாகன நிறுத்த மையம் கட்டப்பட்டு கடந்த மாதம் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டு தற்போது கட்டணமில்லாமல் லாரிகள் நிறுத்தப்படுகிறது. மேலும் இனிமேல் மணலி மண்டலத்துக்கு உட்பட்ட பகுதிகளில் பொன்னேரி நெடுஞ்சாலையில் லாரிகள் நிறுத்தினால் லாரி ஒன்றுக்கு 5 ஆயிரம் ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும் என்றும் போக்குவரத்து துறையின் சார்பில் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
‘’சிபிசிஎல் நிறுவனத்துக்கு வரக்கூடிய லாரிகள் அனைத்தும் பொன்னேரி நெடுஞ்சாலையில் நிறுத்தாமல் வாகன நிறுத்த மையத்தில் நிறுத்தப்படுவதால் போக்குவரத்து நெரிசல், விபத்துக்கள் பிரச்னைக்கு தீர்வு ஏற்பட்டுள்ளது. பழைய திருவொற்றியூர் தாலுக்கா, மணலி கிராமம் எஸ்எல்ஆர் மற்றும் ஆர்எஸ்ஆர் வருவாய் பதிவேடு அடிப்படையில், வருவாயை பெருக்கி, உள்ளூர் மக்களின் அடிப்படை வசதி மேம்படுத்திட லாரிகள் நிறுத்த மையம் பராமரிப்பு பணிகளை சென்னை மாநகராட்சி, மணலி மண்டல அலுவலக கட்டுப்பாட்டில் விட சிபிசிஎல் நிறுவனம் முன் வரவேண்டும்’’ என்று மக்கள் தெரிவித்தனர்.
