கோடை சீசன் நெருங்கிய நிலையில் மலர் செடி உற்பத்தி மும்முரம்

ஊட்டி, மார்ச் 4: கோடை சீசன் நெருங்கிய நிலையில் ஊட்டி தாவரவியல் பூங்காவில் உள்ள நர்சரிகளில் மலர் செடிகள் உற்பத்தி மும்முரமாக நடந்து வருகிறது. ஆண்டுதோறும் கோடை காலமான ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் ஏராளமான சுற்றுலா பயணிகள் ஊட்டி வருகின்றனர். இங்கு வரும் சுற்றுலா பயணிகளில் பெரும்பாலானவர்கள் தாவரவியல் பூங்காவிற்கு செல்கின்றனர். அங்கு செல்லும் சுற்றுலாப் பயணிகளை மகிழ்விக்க ஆண்டுதோறும் மே மாதம் மலர் கண்காட்சி நடத்தப்படுகிறது. இந்த மலர் கண்காட்சியின்போது பூங்கா முழுவதிலும் பல லட்சம் மலர் செடிகள் நடவு செய்யப்பட்டு அதில் மலர்கள் பூத்துக் குலுங்கும். அதேபோல் 35 ஆயிரம் தொட்டிகளுக்கு மேல் மலர் செடிகள் நடவு செய்யப்பட்டு அந்த தொட்டிகள் பல்வேறு வடிவங்களில், மாடங்களில் அலங்கரித்து வைக்கப்படும்.

இந்த தொட்டிகளில் பால்சம், சைக்ளோமென் போன்ற மலர் செடிகள் நடவு செய்யப்படும். கோடை சீசன் துவங்க ஒரு மாத காலமே உள்ள நிலையில் தற்போது பூங்காவில் நாற்று நடவு, தொட்டிகளில் நாற்று நடவு மற்றும் உற்பத்தி செய்யும் பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது. தாவரவியல் பூங்காவில் உள்ள நர்சரிகளில் தற்போது பல்வேறு வகையான மலர்ச் செடிகளை உற்பத்தி செய்யும் பணி மும்மரமாக நடந்து வருகிறது. இந்த மலர்ச்செடிகள் வளர்ந்தவுடன் பூங்காவில் உள்ள மாடங்கள் மற்றும் பல்வேறு பகுதிகளிலும் அலங்கரித்து வைக்கப்படும் என ஊழியர்கள் தெரிவித்தனர்.

Related Stories: