கிணத்துக்கடவு அருகே மூளைக்காய்ச்சலுக்கு 10ம் வகுப்பு மாணவன் பலி

கிணத்துக்கடவு, மார்ச் 4:  கிணத்துக்கடவு அருகே மூளைக்காய்ச்சலுக்கு 10ம் வகுப்பு மாணவன் பரிதாபமாக பலியானார். கோவை கிணத்துக்கடவு அருகே உள்ள வடபுதூர் ஊராட்சி மணிகண்டபுரத்தை சேர்ந்தவர் மாசாணம். இவருக்கு மனைவி மற்றும் 3 மகன்கள் உள்ளனர். மூத்த மகன் ரஞ்சித் (15). இவர், கிணத்துக்கடவு அரசு பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வந்தார். இவருக்கு கடந்த சில நாட்களாக காய்ச்சல் இருந்தது. இதனால், கிணத்துக்கடவில் உள்ள தனியார் மருத்துவனையில் ரஞ்சித்துக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இருப்பினும், காய்ச்சல் அதிகமானதால் அவரை பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். மேல்சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அங்கு ரஞ்சித்துக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் அவர் பரிதாபமாக இறந்தார். அவரது உடலை பரிசோதனை செய்ததில் மூளைக்காய்ச்சல் பாதிப்பு இருந்தது தெரியவந்தது. இது குறித்து தகவலறிந்த வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் சித்ரா தலைமையிலான குழுவினர், கிணத்துக்கடவு அரசு பள்ளியில் 9ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு சளி, காய்ச்சல் பரிசோதனை செய்தனர். அதில், யாருக்கும் காய்ச்சல் பாதிப்பு இல்லை என தெரியவந்தது. ரஞ்சித்தின் உறவினர் உட்பட 5 பேருக்கு சளி, ரத்த பரிசோதனை செய்யப்பட்டது. அவரது வீடு மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் சுகாதாரத்துறையினர் மருந்து தெளித்தனர்.

Related Stories: