ஆவணம் இல்லாததால் பறிமுதல் செய்யப்பட்டது 61 ஆயிரம் பெண்ணிடம் திரும்ப ஒப்படைப்பு வந்தவாசியில் தேர்தல் பறக்கும்படை அதிர்ச்சி

வந்தவாசி, மார்ச் 4: வந்தவாசியில் பறக்கும் படையினர் பெண்ணிடம் பறிமுதல் செய்த ₹61 ஆயிரத்தை உரிய ஆவணம் இல்லாத நிலையில் திரும்ப ஒப்படைத்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி- திண்டிவனம் நெடுஞ்சாலை எஸ்.காட்டேரி கிராமம் அருகே நேற்று, தாசில்தார் சுதாகர் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் உத்தமன் உள்ளிட்ட பறக்கும் படை குழுவினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.அப்போது, அவ்வழியாக புதுவையில் இருந்து காஞ்சிபுரம் நோக்கி சென்ற காரை நிறுத்தி சோதனை செய்தனர். காரில் பயணம் செய்த ெஜயந்தி என்பவரிடம் ₹61 ஆயிரம் ரொக்கம் இருந்தது. பறக்கும் படையினர் விசாரித்தபோது, ஜெயந்தி தனது உறவினருக்கு உடல் நிலை சரியில்லாமல் காஞ்சிபுரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது மருத்துவ செலவிற்கான அந்த பணம் தேவைப்படுகிறது என கூறினார். ஆனால், பணத்திற்கான உரிய ஆவணம் எதுவும் அவரிடம் இல்லாததால் பறக்கும் படையினர் அதனை பறிமுதல் செய்து, வந்தவாசி தாலுகா அலுவலகத்தில் தாசில்தார் திருநாவுக்கரசிடம் ஒப்படைத்தனர். பின்னர், அங்கு வந்த ஜெயந்தி, தாசில்தார் திருநாவுக்கரசிடம் பணத்ைத திரும்ப தரும்படி மன்றாடி கேட்டார். அதற்கு தாசில்தார், ‘தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளது. இது உங்களுக்கு தெரியாதா? பணம் பறிமுதல் செய்தது குறித்து மாவட்ட நிர்வாகத்தின் கவனத்திற்கு கொண்டு சென்றுவிட்டோம். நீங்கள் தேர்தல் நடத்தும் அலுவலரிடம் சென்று கேளுங்கள்’ என தெரிவித்தார்.

இதையடுத்து ஜெயந்தி, தேர்தல் நடத்தும் அலுவலர் கீதாலட்சுமியிடம் சென்று நடந்த விபரங்களை எடுத்துக் கூறினார். அப்போது, ஜெயந்தி காஞ்சிபுரத்தில் உள்ள தனக்கு தெரிந்த அதிகாரி ஒருவரது பெயரையும் சொல்லியதாக தெரிகிறது.

எனவே, தேர்தல் நடத்தும் அலுவலர் கீதாலட்சுமி, அதற்குரிய ஆவணங்கள் ஜெயந்தியிடம் உள்ளதா என விசாரித்து பணத்தை திரும்ப ஒப்படைக்கும்படி தேர்தல் பிரிவு மண்டல தாசில்தார் அகத்தீஸ்வரனுக்கு உத்தரவிட்டார். ஆனால், ஜெயந்தி தான் எடுத்துச்சென்ற பணத்திற்கான எந்த ஆவணமும் கொடுக்காத நிலையில், ₹61 ஆயிரத்தை அதிகாரிகள் அவரிடம் ஒப்படைத்துவிட்டனர். உரிய ஆவணம் இல்லாததால் பறக்கும் படையினர் பறிமுதல் செய்த பணத்தை, அதிகாரி ஒருவரது பெயரை சொல்லியதும் திரும்ப கொடுத்துவிட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் பணத்தை பறிமுதல் செய்த பறக்கும் படையினரும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

Related Stories: