சென்னை: தமிழ்நாடு அரசு வெளியிட்ட அறிக்கை: உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் தமிழ்ப் பல்கலைக்கழக ஏற்புடன், தமிழ் முதுகலைப் பட்டப் படிப்பு மற்றும் ஐந்தாண்டு ஒருங்கிணைந்த தமிழ் முதுகலைப் பட்டப்படிப்பு மற்றும் தமிழ் முனைவர் பட்ட வகுப்பு ஆகியன நடத்தப்பெற்று வருகின்றது. 2026-27ம் கல்வியாண்டில் ஐந்தாண்டு ஒருங்கிணைந்த தமிழ் முதுகலைப் பட்டப் படிப்பு மற்றும் முதுகலைத் தமிழ் பட்டப் படிப்பிற்கான மாணவர்கள் சேர்க்கை நடைபெறவுள்ளன.
பயில விரும்புவோர் விண்ணப்பத்தை www.ulakaththamizh.in என்ற இணைய முகவரியில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் அல்லது நேரில் பெற்றுக் கொள்ளலாம். சேர்க்கைப்பெறும் மாணவர்களுள் தேர்வின் அடிப்படையில் 15 மாணவர்களுக்கு திங்கள்தோறும் தமிழ்நாடு அரசால் ரூ.2000 வீதம் கல்வி உதவித்தொகை வழங்கப்படும். இருபாலருக்கான தனித்தனி கட்டணமில்லா தங்கும் விடுதி வசதி மற்றும் உணவு வசதி உள்ளது.
நிறைவு செய்யப்பட்ட விண்ணப்பங்கள், இறுதியாகப் படித்த கல்விச் சான்று மற்றும் மாற்றுச்சான்றிதழ் (சான்றொப்பமிடப்பட்டது) நகலுடன் இணைத்து நேரில் (அ) அஞ்சலில் இயக்குநர் (கூ.பொ.), உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், இரண்டாம் முதன்மைச் சாலை, மையத் தொழில்நுட்பப் பயிலக வளாகம், தரமணி, சென்னை-600113 (தொலைபேசி 044-22542992) என்ற முகவரியில் ஒருங்கிணைந்த தமிழ் முதுகலை பட்டப் படிப்பிற்கு வரும் 15ம் தேதிக்குள், முதுகலை தமிழ் பட்டப் படிப்பிற்கு வரும் 30ம் தேதிக்குள் சமர்ப்பித்திட வேண்டும். மேலும் தகவல் பெற மேற்காணும் முகவரியில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
