கோபி, மார்ச் 4: கோபி அடுத்த கவுந்தப்பாடியில் ஜே.சி.பி உரிமையாளர்கள் மற்றும் டிரைவர்கள் டீசல் விலை உயர்வை கண்டித்து வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால், கட்டுமான பணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
டீசல் விலை உயர்வு காரணமாக அத்தியாவசிய பொருட்கள் விலை கடுமையாக உயர்ந்து வருவதுடன், சரக்கு வாகனங்கள், கட்டுமான பணிகளில் பயன்படுத்தப்படும் வாகனங்களை வைத்து தொழில் செய்து வருபவர்களும் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர். டீசல் விலை உயர்வு, வாகன காப்பீட்டு கட்டண உயர்வு, உதிரிபாகங்கள் விலை கடுமையாக உயர்ந்ததால், தொழிலே செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இதனால், டீசல் விலை உயர்வு, உதிரிபாகங்கள் விலை குறைப்பு, காப்பீடு கட்டணத்தை குறைக்க வலியுறுத்தி கோபி அருகே உள்ள கவுந்தப்பாடியில் சுற்றுப்புற பகுதிகளை சேர்ந்த 50க்கும் மேற்பட்ட ஜே.சி.பி. இயந்திர டிரைவர்கள், உரிமையாளர்கள் வாகனங்களை அய்யம்பாளையம் பிரிவில் நிறுத்தி தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால், கட்டுமான பணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.