- மேக்கேதாடு அணை
- தமிழ்நாடு அரசு
- பசுமை தீர்ப்பாயம்
- புது தில்லி
- தேசிய பசுமை தீர்ப்பாயம்
- காவிரி
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
புதுடெல்லி: மேகதாது அணை திட்டத்திற்கு சுற்றுச்சூழல் அனுமதி வழங்கக் கூடாது என வலியுறுத்தி தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் தமிழக அரசு புதிய மனுவை தாக்கல் செய்துள்ளது. தமிழக விவசாயிகளின் உயிர்நாடியாக விளங்கும் காவிரி நதிநீர் பங்கீடு பிரச்னையை தீர்க்கும் வகையில், உச்ச நீதிமன்றத்தால் காவிரி நீர் மேலாண்மை ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், காவிரியின் குறுக்கே ராமநகர் மாவட்டம் கனகபுரா தாலுகா மேகதாது பகுதியில் சுமார் ரூ.9,000 கோடியில் புதிய அணை கட்ட கர்நாடக அரசு முயன்று வருகிறது.
இதற்கு தமிழக அரசு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதனை விசாரித்த நீதிமன்றம், மேகதாது அணை திட்ட அறிக்கை தயாரிக்க கர்நாடக அரசுக்கு அனுமதி அளித்ததோடு, ஒன்றிய நீர்வள ஆணையம் இறுதி முடிவெடுக்கும் முன்பாக காவிரி நதிநீர் மேலாண்மை ஆணையத்தின் பரிந்துரைகளைப் பெற வேண்டும் என்றும், தமிழக அரசுடன் கண்டிப்பாக ஆலோசிக்க வேண்டும் என்றும் கடந்த ஆண்டு நவம்பர் 13ம் தேதி உத்தரவிட்டது.
இந்த உத்தரவுக்கு எதிராக தமிழக அரசு தாக்கல் செய்த மறுஆய்வு மனுவை, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சூரியகாந்த் தலைமையிலான அமர்வு கடந்த 2 நாட்களுக்கு முன்பு தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. இத்தகைய சூழலில், மேகதாது அணை திட்டத்திற்கு எதிராக தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் தமிழக அரசு தற்போது புதிய மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளது. அந்த மனுவில், ‘மேகதாது அணை திட்டத்தால் லட்சக்கணக்கான மரங்கள் வெட்டப்பட்டு, வனவிலங்குகள், பறவைகள் மற்றும் நீர்வாழ் உயிரினங்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்படும்.
எனவே, காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்டும் கர்நாடக அரசின் திட்டத்தை சட்டவிரோதம் என்று அறிவித்து ரத்து செய்ய வேண்டும். ஒன்றிய சுற்றுச்சூழல் அமைச்சகம் இந்த திட்டத்திற்கு சுற்றுச்சூழல் அனுமதி உட்பட எவ்வித அனுமதியும் வழங்கக் கூடாது. மேலும், கர்நாடக அரசு மற்றும் காவிரி நீர் வாரி நிகம் நிறுவனம் அணை கட்டுமானத்திற்காக பூமி பூஜை போடுவது உள்ளிட்ட எந்தவொரு செயலிலும் ஈடுபட தடை விதிக்க வேண்டும்’ என்று வலியுறுத்தப்பட்டுள்ளது. இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது.
