மனைவிக்கு சரமாரி கத்தி குத்து: தலைமறைவான கணவனுக்கு வலை

செங்கல்பட்டு: செங்கல்பட்டு, அண்ணாநகர் 4வது குறுக்கு தெருவை சேர்ந்தவன் அகிலன் (47). கத்தார் நாட்டில் வேலை பார்த்துவிட்டு, கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் சொந்த ஊர் திரும்பினார். இவரது மனைவி சுமதி (45). செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் நர்சாக வேலை பார்க்கிறார். இவர்களுக்கு விஷ்வா (20) என்ற மகன் உள்ளார். அகிலன், வெளிநாட்டில் வந்த பின்னர், கடந்த 2 ஆண்டுகளாக எந்த வேலைக்கும் செல்லாமல், ஊர் சுற்றி வந்ததாக தெரிகிறது. மனைவியிடம், அடிக்கடி பணம் கேட்டு தொல்லை கொடுத்துள்ளார். இந்நிலையில், நேற்று காலை சுமதி, வேலைக்கு புறப்பட்டார். அப்போது அகிலன், குடிக்க பணம் கேட்டுள்ளார்.

அதற்கு, தன்னிடம் பணம் இல்லை. வேலைக்கு செல்லும்போது தகராறு செய்ய வேண்டாம் என சுமதி கூறியுள்ளார். இதனால், அவர்களுக்குள் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த அவர், மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து, மனைவியின் கழுத்து, வயிறு உள்பட உடல் முழுவதும் சரமாரியாக குத்தினார். இதனால் அவர், அலறி துடித்தார். சுமதியின் அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடிவந்தனர். பொதுமக்களை கண்டதும், அகிலன் அங்கிருந்து தப்பிவிட்டார். தகவலறிந்து செங்கல்பட்டு டவுன் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று, படுகாயமடைந்த சுமதியை மீட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து, தப்பியோடிய  அகிலனை வலைவீசி தேடி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Related Stories: