மதுராந்தகம்4: மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில், ஆன்மிக குரு பங்காரு அடிகளார் தனது பிறந்தநாளை கேக் வெட்டி கொண்டாடினார். மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தின் ஆன்மிக குரு பங்காரு அடிகளாரின் 81வது பிறந்தநாள் விழாவையொட்டி, அவருக்கு பாத பூஜை, வேள்வி பூஜை, ஆதிபராசக்தி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை உள்பட பல்வேறு நிகழ்ச்சிகள் சித்தர் பீடத்தில் கடந்த 28ம் தேதி முதல் நேற்று வரை செவ்வாடை பக்தர்களால் நடத்தப்பட்டது. இதில், பங்காரு அடிகளாரின் பிறந்த நாளான நேற்று, அவரது இல்லத்தில் இருந்து ஏராளமான செவ்வாடை பக்தர்கள் மலர்களால் அலங்கரிக்கப்பட்ட ரதத்தில், பங்காரு அடிகளாரை ஊர்வலமாக அழைத்து வந்து, சித்தர் பீடத்தில் ஏற்பாடு செய்த சிறப்பு பூஜையில் அமர வைத்தனர். அங்கு அவர், ஓம் மேடை, புற்று மண்டபம், சப்த கன்னியர் சந்நதி ஆகியவற்றை வலம் வந்து கருவறையில் உள்ள ஆதிபராசக்தி அம்மனுக்கு தீபாராதனை காண்பித்து பூஜை செய்தார். பின்னர், ஆன்மிக இயக்க அரங்கில் செவ்வாடை பக்தர்கள் முன்னிலையில், பங்காரு அடிகளார், பிறந்தநாள் கேக் வெட்டி கொண்டாடினார்.