பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஊராட்சி தலைவர் போராட்டம்

புழல்: சோழவரம் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, ஊராட்சி மன்ற தலைவர் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டார். இதனால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. சோழவரம் ஒன்றியம் ஞாயிறு ஊராட்சி மன்ற தலைவர் எல்லையன். கன்னியம்பாளையம் துவக்கப் பள்ளியில் பாழடைந்த கட்டிடத்தை அகற்றவேண்டும். ரேஷன் கடை கட்டிடம் கட்டுதல், கிராமத்தில் தொகுப்பு வீடுகள் ஒதுக்குதல் உட்பட 9 கோரிக்கைகள் வலியுறுத்தி நேற்று காலையில் சோழவரம் ஊராட்சி ஒன்றிய வளாகத்தில் அமர்ந்து தனது ஆதரவாளர்களுடன் போராட்டத்தில் ஈடுபட்டார். தகவலறிந்து, ஒன்றிய அதிகாரிகள் அங்கு சென்று, எல்லையனிடம் சமரசம் பேசினர். அப்போது, உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். அதன்பேரில், 5 மணிநேரம் நடைபெற்ற போராட்டத்தை கைவிட்டு அவர் சென்றார். இதனால், அங்கு பெரும் பரபரப்பு காணப்பட்டது.

Related Stories: