அண்ணாநகர்: நொளம்பூர், திருமங்கலம், கோயம்பேடு, மதுரவாயல், அமைந்தகரை, அரும்பாக்கம், அண்ணாநகர் உள்ளிட்ட பகுதிகளில் மளிகை கடை, பெட்டி கடைகளுக்கு குட்கா விற்பனை செய்வதாக நொளம்பூர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, நொளம்பூர் உதவி கமிஷனர் சிவக்குமார் தலைமையில் தனிப்படை போலீசார் நொளம்பூர் சுற்றுவட்டார பகுதியில் வாகன சோதனையை தீவிரப்படுத்தி வந்தனர். இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு நொளம்பூர் கம்பர் நகர் பகுதியில் இன்ஸ்பெக்டர் செல்வகுமார் தலைமையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அவ்வழியாக வந்த மினி லோடு வேனை மடக்கினர். போலீசாரை கண்டதும் அந்த வேன் வேகமாக சென்றது. போலீசார் விரட்டி சென்று மடக்கி பிடித்து ஆய்வு செய்தனர். அதில் 400 கிலோ குட்கா இருப்பது தெரியவந்தது.