நீடாமங்கலம். மார்ச் 4: திருச்சி மாவட்டம் நவலூர் குட்டப்பட்டில் உள்ள மகளிர் தோட்டக்கலை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் பயிலும் மாணவிகள் ஊரக தோட்டக்கலை பணி அனுபவம் தொடர்பாக நீடாமங்கலம் வேளாண்மை அறிவியல் நிலையத்தில் தங்கி சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள விவசாயிகளின் அனுபவங்களை பெற வந்துள்ளனர். இதுதொடர்பாக நேற்று தோட்டக்கலை மாணவிகள் திருவாரூர் மாவட்டம் மாளிகைமேட்டில் வசிக்கும் விவசாயி ராஜா என்பவரிடம், அவரது தோட்டத்தில் விளையும் தோட்டக்கலை பயிர்களின் உற்பத்தி முறைகளை பற்றி கேட்டறிந்தனர். மேலும் பூச்சித் தாக்குதல் மற்றும் நோய் தாக்குதலுக்கு எதிராக இவர் பயன்படுத்தும் இஞ்சி பூண்டு கரைசலின் தயாரிப்பு முறைகள் பற்றியும் அவற்றின் தெளிப்பு முறைகள் பற்றியும் கேட்டு அறிந்து கொண்டனர்.