அனுமதியின்றி பிரசார கூட்டம் நடத்த கூடாது கட்சி பிரமுகர்களுக்கு அறிவுறுத்தல்

திருத்துறைப்பூண்டி, மார்ச் 4: திருத்துறைப்பூண்டியில் சட்டமன்ற தேர்தல் தொடர்பாக அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் ஆலோசனைக் கூட்டம் தாசில்தார் அலுவலகத்தில் நடைபெற்றது. தேர்தல் நடத்தும் அலுவலர் கீதா தலைமை வகித்தார். தேர்தல் நடத்தும் உதவி அலுவலர் ஜெகதீசன், தேர்தல் பிரிவு துணை தாசில்தார் செந்தில்குமார் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் கலந்துகொண்டனர். கூட்டத்தில் அரசு அலுவலகங்கள், அலுவலக வளாகத்தில் சுவர் விளம்பரங்கள், போஸ்டர்கள், விளம்பர போர்டுகள், பிளக்ஸ் மற்றும் கொடிகளை தானாகவே நீக்கம் செய்ய வேண்டும். ரயில்வே நிலையங்கள், பேருந்து நிலையங்கள், பாலங்கள், சாலை ஓரங்கள், அரசு பேருந்துகள், உள்ளாட்சி அமைப்புகளின் கட்டடங்கள் ஆகியவற்றில் உள்ள போஸ்டர்கள், பேனர்கள், கொடிகம்பங்கள் அகற்றி கொள்ள வேண்டும். தேர்தல் நடத்தும் அலுவலரின் அனுமதி பெறாமல் தனியார் இடங்களில் அரசியல் விளம்பரங்ள் மற்றும் சுவர் விளம்பரங்கள் செய்ய கூடாது. நகர்புறங்களில் பேனர்கள் வைக்க முற்றிலும் அனுமதி கிடையாது.

கட்சி வேட்பாளரை ஆதரித்து தேர்தல் பிரசாரம் செய்யும் போதும், தெருமுனை கூட்டங்கள், பேரணிகள், பொதுகூட்டங்கள் நடத்தும் போது, மற்றும் வாகன பிரசாரத்திற்கும் தேர்தல் நடத்தும் அலுவலரின் அனுமதி பெற வேண்டும். வாக்குசாவடி பகுதியிலிருந்து 100 மீட்டர், 200 மீட்டர் அடையாளம் இடப்பட்ட பகுதி வாக்குசாவடியிலிருந்து 100 மீட்டர் பகுதிக்குள் எவ்வித வாக்கு சேகரிப்பும் வாகனங்களும் அனுமதி இல்லை. வாக்குசாவடியிலிருந்து 200 மீட்டருக்கு அப்பால் அரசியல் கட்சி அலுவலகம், பந்தல்கள் அமைக்க வேண்டும். 200 மீட்டருக்குள் வாக்கு சேகரிப்பு செய்ய அனுமதி கிடையாது என்று அரசியல் கட்சியினருக்கு அறிவுறுத்தப்பட்டது.

Related Stories: