அதிகாரி எச்சரிக்கை திருமண மண்டபத்தை சுற்றி கட்சி கொடி, போர்டுகள் வைக்க அனுமதி கிடையாது தேர்தல் நடத்தும் உதவி அலுவலர் அறிவுறுத்தல்

திருத்துறைப்பூண்டி, மார்ச்4: திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் சட்டமன்ற தேர்தல் தொடர்பாக திருமண மண்டப உரிமையாளர்களுக்கான ஆலோசனை கூட்டம் தாசில்தார் அலுவலகத்தில் நடைபெற்றது. தேர்தல் நடத்தும் அலுவலர் கீதா தலைமை வகித்தார். தேர்தல் நடத்தும் உதவி அலுவலர் ஜெகதீசன், தேர்தல் பிரிவு துணை தாசில்தார் செந்தில்குமார் மற்றும் திருமண மண்டப உரிமையாளர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் ஏப்ரல் 6 சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு நன்னடத்தை விதிமுறைகள் நடைமுறைப் படுத்தப்பட்டுள்ளது. திருவாரூர் மாவட்டத்தில் திருமண மண்டபங்களை சுப நிகழ்ச்சிகளுக்கு வாடகைக்கு விடும்போது மண்டப உரிமையாளர்கள் முன் வாடகை கோரி வருபவர்களிடம் தேர்தல் நடத்தை விதிகள் நடைமுறையில் இருப்பதால் கட்சிக் கொடிகள் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்களின் போர்டுகள், தட்டிகள், சுவரொட்டிகள் எதையும் மண்டபத்திலும், மண்டபத்தை சுற்றியுள்ள பகுதிகளிலும் வைத்து விளம்பரத்தப்படுத்த மாட்டோம் என்ற நிபந்தனைக்குட்பட்டு எழுத்துப்பூர்வமாக சம்மதித்த பிறகே வாடகைக்கு விடவேண்டும். மேலும் பெயர் மற்றும் முகவரி தொலைபேசி எண் பற்றிய விபரங்களுடன் உடன் சம்மந்தப்பட்ட தாசில்தார் அலுவலகத்தில் மண்டப உரிமைதாரர்கள் ஒப்படைக்க வேண்டும். மேற்குறிப்பிட்ட நிகழ்ச்சிகள் தவிர வேறு உபயோகங்களுக்கு மண்டபம் பயன்படுத்துவது தெரியவந்தால் மண்டப உரிமையாளர்கள் மீது தேர்தல் நடத்தை விதிகளின்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவுறுத்தப்பட்டது.

Related Stories: