க.பரமத்தி, மார்ச்.4: க.பரமத்தி ஒன்றிய பகுதியில் 99-.5 டிகிரி வரை வெயில் கொளுத்துவதால், பகல் நேரங்களில் மக்கள் நடமாட்டமின்றி சாலைகள் வெறிச்சோடி காணப்படுகின்றன. ஒன்றிய பகுதியில் ஆண்டுக்கு 9 மாதம் வரை வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும். போதிய மழை இல்லாததால் இந்த பகுதியில் விவசாயம் அழிவின் விளிம்புக்கு செல்லும் நிலை உள்ளது. இந்தாண்டு வட கிழக்கு பருவமழை சரி வர பெய்யாததால், அமராவதி, காவிரி ஆறுகளும், ராஜவாய்க்கால், எல்பிபி வாயக்கால் இதனையே நம்பியுள்ள விவசாய கிணறு போன்ற நீர்நிலைகள் தற்போது வறண்டு காணப்படுகின்றன. சில தினங்களுக்கு முன்பு வரை இரவு நேரங்களில் பனிப் பொலிவு அதிகமாக இருந்தது. தற்போது பனிப்பொழிவு குறைந்து இரவு நேரங்களில் புழுக்கமாக உள்ளது. பகல் நேரங்களில் வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது. கரூர் கோவை தேசிய நெடுஞ்சாலையில் மக்கள் நட மாட்டம் சற்று குறைந்து வெறிச் சோடி காணப்படுகிறது.