ஆமத்தூர் அரசு பள்ளி மாணவர்களிடம் வசூலித்த பணம் ஒப்படைப்பு முதன்மை கல்வி அலுவலர் விசாரணை

விருதுநகர், மார்ச் 4: விருதுநகர் அருகே ஆமத்தூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் கொரோனா காலத்தில் 6, 9 மற்றும் 11ம் வகுப்பு மாணவர் சேர்க்கையின் போது சேர்க்கை கட்டணம் வசூலிக்க கூடாது என்ற அரசு உத்தரவை மீறி தலைமையாசிரியர் (பொ) மற்றும் தலைமையாசிரியராக பொறுப்பேற்ற சர்மிளாவும் பணம் வசூலித்துள்ளனர். இந்த பணத்தை செலுத்தாமல் இருவரும் தங்களுக்குள் பிரித்து வைத்துக் கொண்டதாகவும், அரசு உத்தரவை மீறி வசூலித்த பணத்தை மாணவ, மாணவியரிடம் தரவேண்டும். தவறு செய்த ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி கிராம மக்கள் நேற்று முன்தினம் கலெக்டர், முதன்மை கல்வி அலுவலரிடம் மனு அளித்தனர்.

இது தொடர்பான செய்தி பத்திரிகைளில் வெளியானது. முதன்மை கல்வி அலுவலர் பாலதண்டாயுதபாணி நேற்று ஆமத்தூர் அரசு பள்ளிக்கு சென்று நேரில் விசாரணை நடத்தி மாணவர்களிடம் பணத்தை திருப்பி தர உத்தரவிட்டார். முதன்மை கல்வி அலுவலர் முன்னிலையில் ஆசிரியர்கள் வசூலித்த பணத்தை மாணவர்களிடம் ஒப்படைத்தனர். முதன்மை கல்வி அலுவலர் பாலதண்டாயுதபாணி கூறுகையில், ``கொரோனா காலத்தில் மாணவர் சேர்க்கைக்கு கட்டணம் வசூலிக்க அரசு தடை விதித்திருந்தது. அதைமீறி வசூலித்த பணத்தை மாணவர்களிடம் நேற்று ஆசிரியர்கள் ஒப்படைத்தனர். விசாரணையின் அறிக்கையின்படி தவறு செய்த தலைமையாசியர்(பொ) மற்றும் தலைமையாசிரியர் இருவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும்’’ என தெரிவித்தார்.

Related Stories: