சென்னை: ஒடிசா தினத்தையொட்டி சென்னையில் வசிக்கும் ஒடிசா மக்களின் அமைப்பான உத்கல் அசோசியேசன் மெட்ராஸ் சார்பாக சென்னை, ராஜா அண்ணாமலைபுரத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் ஒன்றிய பள்ளிக்கல்வி துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் கலந்து கொண்டார். பின்னர் அவர் அளித்த பேட்டி: விஜய் தலைமையிலான தமிழ்நாடு அரசு பிரதமர் மோடி உடன் இணக்கமாக செயல்படும் என நம்புகிறேன். பி.எம்.ஸ்ரீ உள்ளிட்ட ஒன்றிய அரசின் திட்டங்கள், பிரச்சினைகள் குறித்து தமிழ்நாடு அரசுடன் ஆலோசிக்கப்படும்.
காங்கிரஸ் கட்சியின் தொடர் தோல்விகளாலும், மக்களின் நிராகரிப்பாலும் காங்கிரஸ் கட்சியினர் விரக்தியில் பேசுகின்றனர். ராகுல்காந்தி தன்னை ஜமீன்தாரராக நாட்டை ஆளலாம் என நினைத்து செயல்படுகிறார். ஆனால், தேர்தலில் மக்களின் முடிவுகள் வேறாக இருப்பதால் காங்கிரஸ் கட்சியினர் விரக்தியில் பேசுகின்றனர். நீட் வினாத்தாள் கசிவு சி.பி.ஐ. விசாரணையில் உள்ளது. விசாரணைக்குப் பின்னரே அதுகுறித்தான முழு விவரங்கள் தெரியவரும். இவ்வாறு அவர் பேசினார்.
