குடும்பம் நடத்த வர மறுத்த மனைவிக்கு கத்திக்குத்து •தடுத்த மாமியாரையும் குத்தினார் •தொழிலாளியை பிடித்து விசாரணை

சேலம், மார்ச் 4:சேலத்தில் குடும்பம் நடத்த வர மறுத்த மனைவியையும், தடுத்த மாமியாரையும் கத்தியால் குத்திய கணவரை பிடித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். சேலம் உடையாப்பட்டி கோம்பைக்காடு பகுதியை சேர்ந்தவர் ஜெகநாதன் மனைவி ஜீவா (49). இவரது மகள் கீதா (29). இவருக்கு கடந்த 2 ஆண்டுக்கு முன் அதே பகுதியை சேர்ந்த தொழிலாளி கார்த்திகேயன் (32) என்பவருடன் திருமணம் நடந்தது, ஒன்றரை வயதில் ஆண் குழந்தை உள்ளது. கடந்த ஓராண்டிற்கு முன் தாய் வீட்டிற்கு வந்த கீதா, பின்னர் கணவர் வீட்டிற்கு செல்லவில்லை. அவ்வப்போது தன்னுடன் குடும்பம் நடத்த வருமாறு கீதாவை, கார்த்திகேயன் அழைத்து வந்துள்ளார். ஆனால் அவர், செல்ல மறுத்து தனது தாய் வீட்டிலேயே தங்கியுள்ளார்.

இந்நிலையில் நேற்று மதியம், மாமியார் வீட்டிற்கு வந்த கார்த்திகேயன், மனைவியை தன்னுடன் வருமாறு அழைத்துள்ளார். அவர் வர மறுக்கவும், தகராறு ஏற்பட்டுள்ளது. அதில், ஆத்திரமடைந்த கார்த்திகேயன், தன்னிடம் இருந்த கத்தியால் மனைவி கீதாவின் நெஞ்சில் குத்தினார். அப்போது மாமியார் ஜீவா வந்து தடுத்துள்ளார். அதில், அவரின் கையிலும் கத்திக்குத்து விழுந்தது. உடனே அங்கிருந்து கார்த்திகேயன் தப்பிச் சென்றுவிட்டார். இதையடுத்து படுகாயமடைந்த இருவரையும் உறவினர்கள் மீட்டு சேலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுபற்றி அம்மாபேட்டை இன்ஸ்பெக்டர் கணேசன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். இரவில், கார்த்திகேயன் போலீஸ் பிடியில் சிக்கினார். அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: