மாற்றுத்திறன், 80 வயதை கடந்த 87,770 பேருக்கு தபால் ஓட்டு

சேலம், மார்ச் 4: சேலம் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள், 80 வயதை கடந்தவர்கள் என புதிதாக 87,770 பேர் தபால் மூலம் வாக்களிக்க ஏற்பாடு செய்யப்படுகிறது. கொரோனா காரணமாக 1,050 வாக்காளர்களுக்கு ஒன்று என்ற அடிப்படையில், வாக்குச்சாவடிகள் அமைக்கப்படுகிறது. ேசலம் மாவட்டத்தை பொறுத்தவரை, 11 சட்டமன்ற தொகுதிகளில் 3,277 வாக்குச்சாவடிகள் ஏற்கனவே அமைக்கப்பட்டிருந்தது. தற்போது, 1,003 வாக்குச்சாவடிகள் கூடுதலாக உருவாக்கப்பட்டு, மொத்த எண்ணிக்கை 4,280 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, கொரோனா அச்சுறுத்தல் காரணமாக, நடப்பு தேர்தலில் 80 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும், மாற்றுத்திறனாளிகளுக்கும் தபால் மூலம் வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சேலம் மாவட்டத்தில் உள்ள 11 தொகுதிகளில் 30.04 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். இவர்களில், 80 வயதுக்கு ேமற்பட்ட வாக்காளர்கள் 61,745 பேரும், மாற்றுத்திறனாளிகள் 26,025 பேரும் வாக்காளர்களாக உள்ளது கண்டறியப்பட்டுள்ளது. எனவே, வரும் தேர்தலில் இவர்கள் அனைவரும் தபால் மூலம் வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டு வருவதாக, தேர்தல் பிரிவு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Related Stories: