ஓமலூர், மார்ச் 4: ஓமலூரில், பிரசித்தி பெற்ற கோட்டை மாரியம்மன் கோயில் விழாவில், 18 பட்டி கிராம மக்கள் பொங்கல் வைத்து வழிபட்டனர். ஓமலூரில் பழமை வாய்ந்த கோட்டை மாரியம்மன் கோயில் திருவிழா, கடந்த மாதம் 15ம் தேதி பூச்சாட்டுதலுடன் துவங்கியது. தொடர்ந்து நேற்று அதிகாலை முதலே ஓமலூர் மற்றும் சுற்றுப்புற பகுதியைச் சேர்ந்த 18 பட்டி கிராம மக்கள் கோயிலுக்கு திரண்டு வந்து பொங்கல் வைத்தும், ஆடு-கோழி பலியிட்டும் வழிபட்டனர். மேலும், மண் குதிரை மற்றும் மண் பொம்மைகளை எடுத்து வந்து வேண்டுதல் நிறைவேற்றினர். தொடர்ந்து அலகு குத்துதல், அக்னி கரகம், பூங்கரகம் எடுத்து வந்து நேர்த்த்திக்கடன் செலுத்தினர். விழாவையொட்டி, ஓமலூர் நகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது. இதனையொட்டி, பலத்த போலீஸ் பாதுகாப்பிற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.