கிருஷ்ணகிரி, மார்ச் 4: கிருஷ்கிரி கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில், நேற்று வங்கியாளர்களுடன் தேர்தல் தொடர்பான ஆலோசனை கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு கலெக்டர் ஜெயசந்திரபானு ரெட்டி தலைமை வகித்து பேசினார். அப்போது அவர் பேசியதாவது: தேர்தல் நடத்தை விதிமுறைகள், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் முழுமையாக நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இதனால் ₹50 ஆயிரத்திற்கு மேல் உரிய ஆவணமின்றி பணம் எடுத்துச் சென்றால் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்படுகிறது. பொதுமக்கள் வங்கிக் கணக்கில் ₹10 லட்சத்திற்கு மேல் பணபரிமாற்றம் செய்வதை, வருமான வரித்துறையின் சார்பில் நியமிக்கப்பட்டுள்ள பொறுப்பு அலுவலரால் கண்காணிக்கப்பட உள்ளது. தேர்தல் காலங்களில் சந்தேகப்படும் வகையில், ₹1 லட்சத்திற்கு மேல் பணபரிமாற்றம் செய்யும் போது அந்த வங்கிக் கணக்கு, முழு கண்காணிப்பின் கீழ் கொண்டு வரப்படும்.