சட்டமன்ற தேர்தல் எதிரொலி கட்சிக் கூட்டங்கள் வீடியோவில் பதிவு

தர்மபுரி, மார்ச் 4: தர்மபுரியில் நடக்கும் தேர்தல் தொடர்பான அரசியல் கூட்டங்களை, தேர்தல் அதிகாரிகள் வீடியோவில் பதிவு செய்கின்றனர். சட்டமன்ற தேர்தலையொட்டி தேர்தல் விதிமுறைகளை மீறும் கட்சிகள் மீது, தேர்தல் அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர். அதன்படி தர்மபுரி மாவட்டத்தில் நேற்று முன்தினம் 28 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் அரசியல் கட்சியினர் நடத்தும் தேர்தல் தொடர்பான கட்சி கூட்டங்களை, தேர்தல் ஆணையம் உத்தரவுப்படி வீடியோவில் பதிவு செய்கின்றனர். குறிப்பாக, நேற்று தர்மபுரி மாவட்ட திமுக கட்சி அலுவலகத்தில் நடந்த வாக்குச்சாவடி முகவர்கள் ஆலோசனை கூட்டத்தில், என்ன நடக்கிறது என்பதையும், கட்சியினர் பேசுவதையும் தேர்தல் அதிகாரிகள் வீடியோவில் பதிவு செய்தனர். தர்மபுரி தொகுதிக்கு ஒரு வீடியோ பதிவு குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுவினர் அரசியல் கூட்டங்களை வீடியோவில் பதிவு செய்கின்றனர். இதேபோல் பென்னாகரம், பாலக்கோடு, பாப்பிரெட்டிப்பட்டி, அரூர் தொகுதிகளிலும் நடக்கும் கூட்டங்களை தேர்தல் அதிகாரிகள் வீடியோவில் பதிவு செய்கின்றனர்.

Related Stories: