பழநி, மார்ச் 3: தமிழகத்தில் வரும் ஏப்ரல் 6ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. நடத்தை விதிமுறை அமலுக்கு வந்ததை தொடர்ந்து விதிமீறல்களை தடுக்கும் வகையில் தீவிர வாகன சோதனை நடத்தப்பட்டு வருகிறது. இதன்படி பழநி நகர எல்லைகளான புதுதாராபுரம் சாலையில் உள்ள ஜவஹர் நகர், திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பச்சளநாயக்கன்பட்டி, உடுமலை தேசிய நெடுஞ்சாலையில் சாமிநாதபுரம், கொடைக்கானல் சாலையில் உள்ள தேக்கந்தோட்டம், தாராபுரம் சாலையில் உள்ள தொப்பம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் தேர்தல் பறக்கும் படையினர் சோதனைச்சாவடி அமைத்து வரும் வாகனங்கள் தீவிரமாக பரிசோதனை செய்யப்பட்டு வருகின்றன. இப்பணியை நேற்று வருவாய் கோட்டாட்சியர் அசோகன், தாசில்தார் வடிவேல் முருகன் தலைமையிலான அதிகாரிகள் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.