சின்னாளபட்டி, மார்ச் 3: சின்னாளபட்டி 5வது வார்டு ஜீவா நகரில் அனைத்து சமுதாய மக்களும் இணைந்து ஆண்டுதோறும் சந்து மாரியம்மன் கும்பிடு விழாவை நடத்தி வருகின்றனர். இந்த ஆண்டு திருவிழா நேற்று அம்மனை அழைத்து வர சுவாமி பெட்டியுடன் கோயிலில் இருந்து புறப்பட்டு பிருந்தாவன தோப்பிற்கு 100க்கும் மேற்பட்ட பெண்கள் முளைப்பாரியுடன் ஊர்வலமாக சென்றனர். தோப்பில் அம்மனுக்கு அலங்காரம் செய்து, தீபாராதனை காட்டியவுடன் அசுவ வாகனத்தில் அம்மனை கோயிலுக்கு அழைத்து வந்தனர். பின்னர் பக்தர்களுக்கு நீர், மோர், கம்மங்கூழ் பிரசாதமாக வழங்கப்பட்டது. தொடர்ந்து மாபெரும் அன்னதானம் நடந்தது. பின்னர் பொதுமக்கள் சார்பில் பொது பொங்கல் வைக்கப்பட்டது. தொடர்ந்து பக்தர்கள் மாவிளக்கு எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர். அதன்பின் அம்மன் கரகம் கங்கையில் கரைப்பதற்காக எடுத்து செல்லப்பட்டது. விழா ஏற்பாடுகளை கமிட்டி தலைவர் ராஜபாண்டி, உப தலைவர் அங்கனன், செயலாளர் பிரகாஷ், உப செயலாளர் மணி உள்பட பலர் செய்திருந்தனர்.