×

ஒருவரை ஒருவர் துரோகி என்று அழைப்பதால் சர்ச்சை: ரூ.25 கோடி கொடுத்து ஒரு ராஜ்யசபா எம்பியை பாஜக வாங்கியதா..? கட்சி தாவிய ஹர்பஜன் சிங் மீது ஆம்ஆத்மி குற்றச்சாட்டு

டெல்லி: ஆம் ஆத்மி கட்சியில் இருந்து விலகி பாஜகவில் இணைந்த முன்னாள் கிரிக்கெட் வீரரும், ராஜ்யசபா எம்.பி.யுமான ஹர்பஜன் சிங், தனது பழைய கட்சி மீது லஞ்ச புகாரை சுமத்தி உள்ளார். கடந்த ஏப்ரல் 24ம் தேதி, பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த ஆம்ஆத்மி மூத்த தலைவரும் கிரிக்கெட் வீரருமான ஹர்பஜன் சிங் உள்ளிட்ட 7 ராஜ்யசபா எம்.பி.க்கள், ஆம் ஆத்மி கட்சியில் இருந்து விலகி பாஜகவில் இணைந்தனர். கட்சி தாவல் தடுப்பு சட்டப்படி, மூன்றில் இரண்டு பங்கு உறுப்பினர்கள் மாறியதால் இது செல்லுபடியாகும் என்று அவர்கள் தரப்பில் கூறப்படுகிறது.

இந்நிலையில் ஆம் ஆத்மி கட்சியின் தலைவர் தேவேந்தர் யாதவ், எக்ஸ் சமூக வலைதளத்தில் ஹர்பஜன் சிங்கை விமர்சித்திருந்தார். அதில், ‘அடே துரோகியே, நீங்கள் தினமும் விமர்சிக்கும் தலைவர் (கெஜ்ரிவால்) வழங்கிய ராஜ்யசபா உறுப்பினர் பதவியை ஏன் ராஜினாமா செய்யவில்லை? பஞ்சாபில் 800க்கும் மேற்பட்ட விவசாயிகள் இறப்பிற்கு காரணமான பாஜகவில் சேர உங்களுக்கு என்ன கட்டாயம்? உங்கள் மனசாட்சியை எவ்வளவு ரூபாய்க்கு விற்றீர்கள்? உங்களுக்கு பாஜக தலா 25 கோடி ரூபாய் தருவதாக கேள்விப்பட்டேன், அது உண்மையா?’ என்று அவர் காட்டமாக கேள்வி எழுப்பியிருந்தார்.

இந்த பதிவிற்கு பதிலடி கொடுத்து ஹர்பஜன் சிங், ‘என்னை துரோகி என்று அழைப்பவர்கள், பஞ்சாப் ராஜ்யசபா சீட் எவ்வளவு தொகைக்கு விற்கப்பட்டது என்பதை முதலில் கேட்டு தெரிந்து கொள்ளட்டும். யாரிடம் எவ்வளவு லஞ்சம் கொடுக்கப்பட்டது, பஞ்சாப்பை கொள்ளையடிக்க யாரை அமைச்சராகவும், காவலாளியாகவும் நியமித்தார்கள் என்பதை வெளிப்படுத்துவேன். பஞ்சாப் கொள்ளையடிக்கப்பட்டு அழிக்கப்பட்டுவிட்டது. நான் விளையாட்டில் 20 ஆண்டுகள் நாட்டிற்கு பெருமை சேர்த்துள்ளேன். கூலிப்படையினரை வைத்து என்னை விமர்சிப்பதன் மூலம் என் பெயரை மாற்றிவிட முடியாது’ என்று கூறியுள்ளார்.

பஞ்சாப்பில் அடுத்த ஆண்டு தேர்தல் நடக்கவுள்ள நிலையில், இரு கட்சிகளுக்கும் இடையிலான இந்த மோதல் அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags : BJP ,Rajya Sabha ,AMADMI ,PARTY ,DAVIYA HARBAJAN SINGH ,Delhi ,Rajyasaba ,Yes Atmi Party ,B. Yuma Harbhajan Singh ,Punjab ,
× RELATED வளர்ந்த இந்தியா (விக்சித் பாரத் 2047)...