மேட்டுப்பகுதிக்கு குடிநீர் வருவதில் சிக்கல் மேல்நிலை தொட்டி அமைக்க வேண்டும் பொதுமக்கள் வேண்டுகோள்

ஆர்.எஸ்.மங்கலம், மார்ச் 3:  சீரான குடிநீர் வினியோகம் இல்லாததால் புதிய மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைத்து தடையின்றி வழங்க பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.  ஆர்.எஸ்.மங்கலம் பேரூராட்சியில் 10,11 மற்றும் 12வது வார்டுகளில் உள்ள தெருக்களான முகமது கோயா தெரு, இக்பால் தெரு, குட்லுநகர் உள்ளிட்ட பகுதிகளில் 500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். ஆனால் இப்பகுதி முழுவதும் காவிரி கூட்டு குடிநீர் திட்ட இணைப்பு வழங்கப்பட்டும் அப்பகுதி மக்களுக்கு தேவையான குடிநீர் வசதி சரிவர கிடைப்பதில்லை. பேரூராட்சியில் முறையிட்டால், அப்பகுதி மேடான பகுதியாக உள்ளதால் நீர்வரத்து வருவதில் கொஞ்சம் சிரமம் உள்ளதாக கூறுவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

இதுகுறித்து ரிஸ்வான் கூறுகையில், நீண்ட நாட்களாக குடிதண்ணீர் பிரச்னை தீர்க்கப் படாமல் உள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் குடிநீருக்காக மிகவும் சிரமப்படுகின்றனர். அதிலும் தற்போது கோடை காலமாக இருப்பதால் குடிநீருக்கும், மற்ற செலவுகளுக்கும் தண்ணீர் வசதி இல்லாமல் மிகவும் சிரமப்படுகின்றனர். ஆகையால் புதிய நீர்த்தேக்க தொட்டி அமைத்து அதன் மூலம் அப்பகுதி மக்களுக்கு காவிரி குடிநீர் வழங்க பேரூராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.  பேரூராட்சி செயல் அலுவலர் மெய்மொழி கூறுகையில், ‘‘ஆர்.எஸ்.மங்கலம் பேரூராட்சிக்கு உட்பட்ட அனைத்து பகுதிகளுக்கும் முறையால் குடிதண்ணீர் வழங்கப்பட்டு வருகிறது. ஒரு சில பகுதிகள் மேட்டுப்பகுதியாக இருப்பதால் அப்பகுதிக்கு தண்ணீர் சீராக சென்றடைவதில் கொஞ்சம் சிரமம் உள்ளது. அதனை கருத்தில் கொண்டு தான்   அப்பகுதியில் ஒரு ஆழ்துளை கிணறு அமைக்கப்பட்டது. ஆனால் துரதிஷ்டவசமாக அங்கு போடப்பட்ட ஆழ்துளை கிணற்றின் தண்ணீர் உவர்ப்பாக போய் விட்டது. ஆகையால் அந்த பகுதிகளுக்கு தற்பொழுது ஒரு முறை விட்டு ஒரு முறை முறையாக தண்ணீர் வழங்கப்பட்டு வருகின்றது.

மேலும் சீராக குடிதண்ணீர் வழங்க அனைத்து நடவடிக்கையும் எடுக்கப்பட்டு வருகின்றது. பொதுமக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்வதற்கான திட்டங்கள் தீட்டப்பட்டு அவை சம்மந்தப்பட்ட துறைக்கு அனுப்பப்பட்டுள்ளது. மேலும் மாவட்ட நிர்வாகத்தின் உதவியுடன் விரைவில் அப்பகுதியில் உள்ள குடிநீர் பிரச்னைக்கு தீர்வு காணப்படும் என்றார்.

Related Stories: