முதுகுளத்தூர் தொகுதியில் வாக்குப்பதிவு மையங்களில் கலெக்டர் ஆய்வு

சாயல்குடி, மார்ச் 3:  முதுகுளத்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வாக்குச்சாவடி மையங்களில், கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் ஆய்வு செய்தார். முதுகுளத்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பல்வேறு வாக்குச்சாவடி மையங்களில் நேற்று மாவட்ட தேர்தல் அலுவலர்,கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் ஆய்வு செய்தார். குறிப்பாக, தேரிருவேலி ராவுத்தர் சாகிப் மேல்நிலைப்பள்ளி, கருமல் கிராம ஊராட்சி சேவை மையம், கருமல் சமுதாயநலக் கூடம், காக்கூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, முதுகுளத்தூர் பள்ளிவாசல் மேல்நிலைப்பள்ளி, செல்வநாயகபுரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, வெண்ணீர் வாய்க்கால் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, கீழத்தூவல் ஊராட்சி ஒன்றிய ஆரம்பப்பள்ளி ஆகிய இடங்களில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடி மையங்களுக்கு கலெக்டர் நேரில் ஆய்வு செய்தார்.

பின்னர் அவர் கூறுகையில், ‘மாவட்டத்திலுள்ள 4 சட்டமன்ற தொகுதிகளுக்கான தேர்தல் முன்னேற்பாடு நடவடிக்கைகளை துரிதமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. நாடாளுமன்ற பொதுத்தேர்தல் 2019ன் போது மொத்தம் 1,369 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன. இந்நிலையில் தற்போது கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 1,050 வாக்காளர்களுக்கு ஒரு வாக்குச்சாவடி என்ற வீதம் கூடுதலாக 278 வாக்குச்சாவடி மையங்கள் ஏற்படுத்தப்பட்டு மொத்தம் 1,647 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட உள்ளன. தேர்தல் ஆணையம் அறிவுறுத்தலின்படி, தேர்வு செய்யப்பட்டுள்ள அனைத்து வாக்குச்சாவடி மையங்களும் தரைதளத்தில் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

மேலும், அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் மின்சார வசதி, குடிநீர் வசதி, கழிப்பறை வசதி போன்ற அடிப்படை வசதிகள் இருப்பதை உறுதி செய்திட அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், மாற்றுத்திறனாளிகள் வசதிக்காக சக்கர நாற்காலி மற்றும் சாய்வு தளம் இருப்பதை உறுதி செய்திடவும் அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது என தெரிவித்தார். இந்த ஆய்வின் போது, முதுகுளத்தூர் சட்டமன்ற தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் மணிமாறன், ஊராட்சிகளின் உதவி இயக்குநர் கேசவதாசன், வட்டாட்சியர் செந்தில்குமார் உட்பட அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.

Related Stories: