பாக்., வங்கதேச எல்லைகளில் ஊடுருவலை தடுக்க அடுத்த ஆண்டு ஸ்மார்ட் பார்டர் திட்டம் தொடங்கப்படும்: ஒன்றிய அமைச்சர் அமித் ஷா தகவல்

 

புதுடெல்லி: கடந்த 1965ம் ஆண்டு தொடங்கப்பட்ட எல்லை பாதுகாப்பு படையின் முதல் இயக்குநர் ஜெனரல் கே.எஃப்.ருஸ்தம்ஜி. டெல்லியில் நேற்று எல்லை பாதுகாப்பு படை சார் நடைபெற்ற ருஸ்தம்ஜி நினைவு சொற்பொழிவு நிகழ்ச்சியில் ஒன்றிய அமைச்சர் அமித் ஷா கலந்து கொண்டு பேசினார்.

அப்போது, “அடுத்த ஓராண்டில் பாகிஸ்தான், வங்கதேச எல்லையில் வலுவான பாதுகாப்பு கட்டத்தை உருவாக்க மோடி அரசு முடிவு செய்துள்ளது. பாகிஸ்தான் மற்றும் வங்கதேசத்துடனான 6,000 கிமீ எல்லைகளை கடக்க முடியாததாக மாற்றும் விதமாக ஸ்மார்ட் பார்டர் திட்டத்தை ஒன்றிய அரசு தொடங்க உள்ளது. ஸ்மார்ட் பார்டர் திட்டத்தில், எல்லை பகுதிகளில் ட்ரோன்கள், ரேடார்கள் மற்றும் அதிநவீன ஸ்மார்ட் கேமராக்கள் பொருத்தப்பட்டு ஒரே தொழில்நுட்ப பாதுகாப்பு கட்டமைப்பு உருவாக்கப்படும்.

இதன் மூலம் எல்லை பகுதிகளில் சட்டவிரோத ஊடுருவல்களை தடுத்து, நாட்டின் மக்கள்தொகையை செயற்கையாக மாற்றும் சதி முறியடிக்கப்படும். இந்தியாவுக்குள் ஊடுருவும் ஒவ்வொருவரும் அடையாளம் காணப்பட்டு வௌியேற்றப்படுவார்கள். அசாம், திரிபுரா, மேற்குவங்கம் ஆகிய மாநிலங்களில் ஆளும் பாஜ அரசு எல்லைகளை கடந்த ஊடுருவல் கூடாது என்ற கொள்கையில் நம்பிக்கை கொண்டுள்ளன. எல்லை பாதுகாப்பு குறித்து விரைவில் இந்த மாநில முதல்வர்களுடன் ஆலோசனை நடத்தப்படும்” என்றார்.

Related Stories: