ஜூன் 21ம் தேதி நடைபெறும் இளநிலை நீட் மறுதேர்வு 100% பிழையின்றி நடத்தப்படும்: ஒன்றிய அமைச்சர் தர்மேந்திர பிரதான் உறுதி

 

புதுடெல்லி: டெல்லியில் நேற்று நடந்த பாரத் கல்வி மாநாடு 2026ல் ஒன்றிய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது, “இளநிலை நீட் தேர்வு வினாத்தாள் கசிவு காரணமாக 22 லட்சம் மாணவர்கள் மிகுந்த மனஉளைச்சலில் உள்ளனர். அவர்களின் வேதனையை புரிந்து கொண்டுள்ளோம்.

மேலும் அரசு பல்வேறு விமர்சனங்களையும், சவால்களையும் எதிர்கொண்டுள்ளது. ஆனால் இந்த அமைப்பை சீர்படுத்துவது அரசின் பொறுப்பு. கண்களை மூடிக்கொண்டு பிரச்னைகளிலிருந்து விலகி செல்வது அரசின் கடமையல்ல. தேர்வு மாஃபியா காரணமாக தகுதியுள்ள ஒரு மாணவர் கூட தனக்குரிய இடத்தை இழக்க கூடாது என்பதில் அதிகாரிகள் உறுதியாக உள்ளனர். எனவே, ஜூன் 21ம் தேதி நடக்க இருக்கும் இளநிலை நீட் மறுதேர்வு 100 சதவீதம் பிழையற்றதாக இருப்பதை உறுதி செய்வதில் ஒன்றிய அரசு தீவிரமாக செயல்பட்டு வருகிறது” என்றார்.

தொடர்ந்து பேசிய அமைச்சர் தர்மேந்திர பிரதான், “தேசிய கல்விக்கொள்கை 2020 மூலம் இந்தியாவின் கல்வி முறைக்கு பாஜ அரசு ஒரு புதிய திசையை வழங்கி உள்ளது. இந்த கொள்கையின் அடிப்படையில் தாய்மொழி வழி கல்விக்கும், குழந்தைகளிடையே விமர்சன சிந்தனை, புதுமைகளை ஊக்குவிப்பதற்கும் முன்னுரிமை அளிக்கப்படுகிறது. தாய்மொழி வாயிலாக கிடைக்கும் அறிவு சமூகத்துக்கு எளிமையானதாகவும், மிகவும் பயனுள்ளதாகவும், பரவலானதாகவும் இருக்கும்” என்று தெரிவித்தார்.

Related Stories: