தேர்தலை மனதில் வைத்து மீண்டும் சாலை பணிகள் தீவிரம்

காரைக்குடி, மார்ச்3: காரைக்குடி நகராட்சியில் 36 வார்டுகள் உள்ளன. நகராட்சியின் மொத்த பரப்பளவு 13.75 சதுர கி.மீ. 153 கிலோ மீட்டருக்கு மேல் சாலைகள் உள்ளன. ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் தொகையுடன் மாவட்டத்தில் பெரிய நகராட்சியாக உள்ளது. பாதாளசாக்கடை திட்டம் கடந்த 3 ஆண்டுகளுக்கு மேலாக ஆமை வேகத்தில் நடப்பதால் நகராட்சிக்கு உட்பட்ட அனைத்து சாலைகளும் குண்டும், குழியுமாக போக்குவரத்துக்கு லயக்கற்ற நிலையில் உள்ளன.தெருக்களில் உள்ள சாலைகளும் முற்றிலும் பெயர்ந்து பயன்படுத்த முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. இதனால் மக்கள் பெரிதும் அவதியடைந்து வருகின்றனர். காரைக்குடி சட்டமன்ற தொகுதியை பொறுத்தவரை காரைக்குடி நகராட்சி பகுதிதான் சட்டமன்ற உறுப்பினரை முடிவு செய்யும் இடத்தில் உள்ளது.

பாதாளசாக்கடை திட்டத்தால் குண்டும், குழியுமாக கிடந்த சாலைகளை சரி செய்ய வலியுறுத்தி திமுக சார்பில் முன்னாள் அமைச்சர் தென்னவன் தலைமையில் சாலையில் உருளும் போராட்டம் நடத்தப்பட்டது. பல்வேறு அரசியல் கட்சியினர், சமூக அமைப்பினர் தொடர் போராட்டம் நடத்தியும் நிர்வாகம் செவிசாய்க்காமல் இருந்தது. இந்நிலையில் தேர்தலை மனதில் வைத்து தேர்தல் தேதி அறிவிப்புக்கு முன்னர் டென்டர் வைத்து தற்போது சாலை அமைக்கும் பணிகளில் தீவிரம் காட்டி வருகின்றனர்.பொதுமக்கள் சிலர் கூறுகையில், பாதாளசாக்கடை திட்டத்தால் மக்கள் பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். பல்வேறு பகுதிகளில் நடந்து செல்லக்கூட முடியாத நிலையில் உள்ளது. இது ஆளுட்கட்சிக்கு எதிராக திரும்பும் நிலை ஏற்பட்டது. இதனை சரி செய்ய மக்களிடம் வாக்குபெறுவதற்காக அவசரகதியில் சாலை அமைக்க தீவிரம் காட்டி வருகின்றனர். மக்கள் கோரிக்கை வைத்த போது கண்டுகொள்ளாமல் இருந்தவர்கள் தேர்தலுக்காக நாடகம் ஆடுகின்றனர்.

Related Stories: