பெரியகுளம், மார்ச் 3: பெரியகுளம் வராகநதியில் வடகரை-தென்கரை ஆகிய பகுதிகளை இணைக்கும் வகையில் கட்டப்பட்டுள்ள பாலத்தில் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் வாகனங்கள் நிறுத்தப்பட்டுள்ளன. தேனி மாவட்டம் பெரியகுளத்தில் நகரின் நடுவே வராகநதி ஓடுகின்றது. இந்த வராகநதியில் வடகரை, தென்கரை என்ற இரு பகுதிகளையும் இணைக்கும் வகையில் பல ஆண்டுகளுக்கு முன்பு ஆடுபாலம் கட்டப்பட்டு பொதுமக்கள் நடந்து செல்லும் வகையில் செயல்பட்டு வந்தது. இந்நிலையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பெரியகுளம் நகர் பகுதியில் உள்ள மக்கள் வடகரையில் இருந்து தென்கரை பகுதிக்கு செல்வதற்கு அதிக தூரம் சுற்றி வர வேண்டிய சூழ்நிலை உள்ளதாக கூறி ஆடுபாலத்தை மாற்றி தரைப்பாலம் ஏற்படுத்தி தர வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். பொதுமக்கள் மற்றும் பெரியகுளம் பகுதி சமூக ஆர்வலர்களின் நீண்ட போராட்டத்திற்கு பின்னர் பழமை வாய்ந்த ஆடுபாலத்தை இடித்து அப்புறப்படுத்தி தரைப்பாலமாக மாற்றியமைத்தனர்.