நெல்லை, மார்ச் 3: நெல்லை மாவட்டத்தில் உள்ள வெடிபொருட்கள் குடோன்கள் மற்றும் கல் குவாரிகளில் அவ்வப் போது ஆய்வு நடத்த வேண்டுமென போலீஸ் அதிகாரிகளுக்கு எஸ்பி மணிவண்ணன் உத்தரவிட்டார். தமிழக சட்டசபைக்கு ஏப்.6ம் தேதி தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தேர்தல் நடத்தை விதிமுறைகள் காரணமாக சட்டம், ஒழுங்கிற்கு அச்சுறுத்தலாக உள்ள ரவுடிகளை போலீசார் கைது செய்து வருகின்றனர். நெல்லை மாவட்டத்தில் இதுவரை முன்னெச்சரிக்கையாக 55 ரவுடிகள் கைது செய்யப்பட்டு உள்ளனர். இந்நிலையில் சட்டமன்ற தேர்தல் பாதுகாப்பு ெதாடர்பாக நெல்லை போலீஸ் அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டம் நடந்தது. எஸ்பி மணிவண்ணன் தலைமை வகித்து பேசுகையில், நெல்லை மாவட்டத்தில் வெடி பொருட்களை விற்பனை செய்யும் குடோன்கள் மற்றும் கல்குவாரிகளில் இருப்புகளை சோதனையிட்டு அவ்வப்போது ஆய்வு நடத்த வேண்டும். சட்டம் ஒழுங்கிற்கு அச்சுறுத்தலாக இருப்பவர்களை கைது செய்தால் மட்டும் போதாது. முன்னாள் மற்றும் இந்நாள் ரவுடிகளின் பட்டியல்களை தயாரித்து முன்னெச்சரிக்கையாக 110 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிந்து கைது செய்யப்பட்டு வருகின்றனர். இதனை விரைவுபடுத்த வேண்டும்.