பேராவூரணி, மே 22: பேராவூரணி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தற்போது கேரளத்தின் அன்னாசிப் பழங்கள் வரத்து அதிகரித்து, முக்கிய பழக்கடைகளிலும், சாலையோரங்களிலும் அதன் விற்பனை மும்முரமாக நடைபெற்று வருகிறது. கேரளா அன்னாசிப் பழங்கள் நல்ல சுவையும், அதிக சாறு நிறைந்ததாகவும் இருப்பதால், கோடை வெயிலில் நா வறண்டு தவிக்கும் மக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. விலை மலிவாகவும், தரமாகவும் கிடைப்பதால் பொதுமக்கள் அன்னாசி பழங்களை ஆர்வமுடன் வாங்கிச் செல்கின்றனர். ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் நடைபெறும் பேராவூரணி வாரச்சந்தையில் 3 பழம் ரூ.100 என்ற விலையில் கூறுகட்டி விற்பனை செய்யப்படுகிறது. தரமான பழங்கள் கிலோ ரூ.40 முதல் 60 வரையிலும் பழக்கடைகளில் விற்பனை செய்யப்படுகிறது
