×

மணவாளக்குறிச்சி அருகே பெண் அதிகாரி மீது தாக்கு: வாலிபர் மீது வழக்கு

 

குளச்சல்,மே 22: மணவாளக்குறிச்சி அருகே வேளாண்மைத் துறை பெண் அதிகாரியை கல்லால் தாக்கிய வாலிபர் மீது போலீசார் 4 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்தனர். மணவாளக்குறிச்சி அருகே ஆற்றிங்கரை காலனியை சேர்ந்தவர் ஜீவிதா (28). நாகர்கோவில் கோணம் வேளாண்மை பொறியியல் துறையில் உதவி பொறியாளராக வேலை பார்த்து வருகிறார். அவருக்கு கார்த்திக் என்பவருடன் திருமணமாகி உள்ளது. திருமணத்திற்கு பின்னர் பணியிட மாறுதல் கிடைக்காததால் ஜீவிதா தாயார் வீட்டில் கணவருடன் தங்கி வேலைக்கு சென்று வருகிறார்.

அதே பகுதியை சேர்ந்த சஞ்சய் (27) என்பவர் திருமணத்திற்கு முன்பு ஜீவிதாவின் செல்போனுக்கு தவறுதலாக குறுஞ்செய்தி அனுப்பியது தொடர்பாக 2 பேருக்கும் இடையே முன் விரோதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்தநிலையில் நேற்று முன்தினம் ஜீவிதா, வீட்டு முன்பு கணவர் கார்த்திக்குடன் பேசிக்கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த சஞ்சய் ஜீவிதாவை பார்த்து ‘திருமணம் முடிந்த பின் ஏன் இங்கிருக்கிறாய்’ என்று கேட்டு கெட்ட வார்த்தையால் திட்டியுள்ளார். பின்னர் ஜீவிதாவின் துப்பட்டாவை பிடித்து இழுத்து கன்னத்தில் ஓங்கி அறைந்துள்ளார். உடனே கணவர் கார்த்திக், சஞ்சையை தடுக்கும் போது சஞ்சய் கீழே கிடந்த கல்லை எடுத்து எறிந்து மிரட்டல் விடுத்து சென்றார்.

இதில் படுகாயமடைந்த ஜீவிதா குளச்சல் அரசு மருத்துவமனையில் புற நோயாளியாக சிகிச்சை பெற்றார். இது குறித்து ஜீவிதா மணவாளக்குறிச்சி போலீசில் புகார் செய்தார். போலீசார் சஞ்சய் மீது பெண் வன்கொடுமை உள்பட 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Tags : Manavalakurichi ,Kulachal ,Agriculture Department ,Jeevita ,Attinkarai Colony ,Nagercoil Konam Agricultural Engineering… ,
× RELATED வேலூர் செங்கல்சூளைகளில் மாமூல் கேட்டு தவெக நிர்வாகிகள் மிரட்டல்