தேனி, மே 22: தேனி அருகே அம்மாபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் முருகன்(60). இவர் சமையல் காண்டிராக்டராக பணிபுரிந்து வந்தார். நேற்று முன்தினம் காலை முருகன், அல்லிநகரத்திற்கு சென்றுவிட்டு வருவதாக வீட்டில் கூறிவிட்டு, மோட்டார் சைக்கிளில் சென்றார். அப்போது அன்னஞ்சியில் ராணுவ வீரர்களுக்கான சிஎஸ்டி கேண்டீன் முன்பாக சென்றபோது, ரோட்டில் இடதுபுறம் நின்றிருந்த காரின் வலது புற கதவினை காரில் இருந்த, தேனி அருகே சொக்கத்தேவன்பட்டியை சேர்ந்த கவுசிக் கார் என்பவர் கதவினை திடீரென திறந்தார்.
இதனை சற்றும் எதிர்பார்க்காத முருகன், டூவீலரில் வந்தபடியே கார் கதவின்மீது மோதி கீழே விழுந்தார். இதில் முருகன் படுகாயம் அடைந்தார். உடனடியாக மீட்டு, முருகனை தேனி அரசினர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டுசென்றபோது, அங்கே பரிசோதனை செய்த மருத்துவர்கள் ஏற்கனவே, முருகன் உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். இச்சம்பவம் குறித்து முருகனின் மனைவி பாண்டியம்மாள் அளித்த புகாரின்பேரில் அல்லிநகரம் போலீசார், விபத்துக்கு காரணமான கவுசிக் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
