கழுகுமலை, மார்ச் 3: கழுகுமலை கோயிலில் கழுகாசலமூர்த்தியை தரிசித்து துண்டுபிரசுரங்களை வைத்து சிறப்பு வழிபாடு நடத்திய அமைச்சர் கடம்பூர் ராஜூ, தேர்தல் பிரசார பணிகளைத் துவக்கினார். கழுகுமலை கழுகாசலமூர்த்தி கோயிலுக்கு நேற்று காலை வருகை தந்த அமைச்சர் கடம்பூர் ராஜூ, சுவாமியை தரிசித்து சிறப்பு வழிபாடு மேற்கொண்டார். இதில் கடந்த 10 ஆண்டுகளாக கோவில்பட்டி சட்டமன்றத் தொகுதியில் மேற்கொள்ளப்பட்ட பல்வேறு வளர்ச்சித்திட்டப் பணிகள் குறித்த துண்டு பிரசுரங்கள், கோவில்பட்டி தொகுதி வாக்காளர் பட்டியல் ஆகியவற்றை வைத்து வணங்கினார். இதைத்தொடர்ந்து தேர்தல் பிரசார பணிகளைத் துவக்கினார். குறிப்பாக கழுகுமலை பேரூராட்சிக்கு உட்பட்ட 15 வார்டுகளில் உள்ள பூத் முகவர்களுக்கும், பொதுமக்களுக்கும் துண்டுபிரசுரங்களை வழங்கி வாக்குச்சேகரித்தார். துரைச்சாமிபுரம், சி.ஆர்.காலனி, கரடிகுளம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பிரசாரம் மேற்கொண்ட அவர் பேசுகையில், ‘‘அதிமுக சார்பில் வேட்பாளராக யார் நிறுத்தப்பட்டாலும் அதிமுகவின் சின்னமான இரட்டை இலைக்கு வாக்களித்து அமோக வெற்றிபெற செய்ய வேண்டும்’’ என்றார்.