விழுப்புரம், மார்ச் 3: செஞ்சி அருகே லஞ்சம் வாங்கிய, முன்னாள் ஊராட்சி மன்ற தலைவருக்கு 4 ஆண்டு சிறை தண்டனை விதித்து, விழுப்புரம் ஊழல் தடுப்பு கோர்ட் தீர்ப்பு வழங்கியது. விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே தேவதானம்பேட்டை கிராமத்தை சேர்ந்தவர் ஆறுமுகம்(52). இவர் 2011-2016ம் ஆண்டில், அதிமுக ஊராட்சி மன்ற தலைவராக பதவி வகித்து வந்தார். அதே ஊரைச் சேர்ந்த பச்சையப்பன் மனைவி சுதா (35) என்பவருக்கு அரசு சார்பில் இந்திராகாந்தி வீடு கட்டும் திட்டத்தின் கீழ் வீடு கட்ட ஊரக வளர்ச்சித்துறை சார்பில் ஆணை வழங்கப்பட்டது. இத்திட்டத்தில் முதல் தவணை தொகை ரூ 59,541க்கான காசோலையை சுதாவிடம் வழங்க, ஊராட்சி மன்ற தலைவர் ஆறுமுகம், சுதாவிடம் ரூ. 10ஆயிரம் லஞ்சம் கேட்டுள்ளார். லஞ்சம் கொடுக்க விருப்பம் இல்லாத சுதா விழுப்புரம் லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் அளித்தார்.