நாகர்கோவில், மார்ச் 3: நாகர்கோவிலில் எம்.ஜி.ஆர். சிலை இரட்டை விரல்களை காட்டியவாறு இருந்ததால், அந்த பகுதியை மட்டும் துணியால் சுற்றி மறைத்தனர். தமிழகத்தில் ஏப்ரல் 6ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான தேர்தல் அறிவிப்பை தொடர்ந்து நடத்தை விதிமுறைகள் கடுமையாக அமல்படுத்தப்பட்டு உள்ள நிலையில் மறைந்த அரசியல் கட்சிகளின் தலைவர்களின் சிலைகளை மூடலாமா? என்பதில் அதிகாரிகள் குழப்பத்துடன் உள்ளனர்.
கடந்த சில நாட்களுக்கு முன், நாகர்கோவிலில் டெரிக் சந்திப்பில் உள்ள இந்திரா காந்தி சிலையை தேர்தல் அதிகாரிகள் மூடினர். பின்னர் 2 மணி நேரம் கழித்து, மீண்டும் திறந்தனர். இந்த நிலையில் நேற்று காலை வடசேரியில் உள்ள எம்.ஜி.ஆர். சிலையில் ஒரு கையை மட்டும் துணியால் மூடி மறைத்தனர். முழு உருவ சிலையில், எம்.ஜி.ஆர். இரட்டை விரல்களை காட்டியவாறு இருந்தார்.