திருவனந்தபுரம்: கேரளாவில் பதவியேற்ற காங்கிரஸ் கூட்டணி அரசின் முதல்வர் உள்பட 21 அமைச்சர்களின் இலாகாக்கள் நேற்று அறிவிக்கப்பட்டன. கேரளாவில் புதிய காங்கிரஸ் கூட்டணி அரசு கடந்த 18ம் தேதி பதவி ஏற்றது. முதல்வர் வி.டி. சதீசன் உள்பட 21 அமைச்சர்கள் பொறுப்பேற்றுக் கொண்டனர்.இந்நிலையில் புதிய அரசு பதவி ஏற்ற 3வது நாளான நேற்று அமைச்சர்களின் இலாகாக்கள் அறிவிக்கப்பட்டன.
அதன் விவரம் வருமாறு:
முதல்வர் வி.டி. சதீசன் – பொது நிர்வாகம், நிதி, சட்டம், துறைமுகம், விமான நிலையங்கள், மெட்ரோ ரயில்.
ரமேஷ் சென்னித்தலா – உள்துறை, ஊழல் தடுப்பு, சிறை, தீயணைப்பு.
சன்னி ஜோசப் – மின்சாரம், சுற்றுச்சூழல்.
கே. முரளீதரன் – சுகாதாரம், அறநிலையத் துறை.
ஏ. பி. அனில்குமார் – வருவாய்த் துறை
பி. சி. விஷ்ணுநாத் – சுற்றுலா, கலாச்சாரம், சினிமா.
எம். லிஜு – கலால், கூட்டுறவு.
ரோஜி எம். ஜான் – உயர்கல்வி
டி. சித்திக் – வேளாண்மை
கே. ஏ. துளசி – பிற்படுத்தப்பட்டோர் நலன்
பிந்து கிருஷ்ணா – தொழிலாளர் நலன், பெண்கள் மற்றும் குழந்தைகள் நலன்.
ஓ. ஜே. ஜெனீஷ் – விளையாட்டு, இளைஞர் நலன், பதிவு.
பி. கே. குஞ்ஞாலிக்குட்டி – தொழில், தகவல் தொழில்நுட்பம்.
என். ஷம்சுதீன் – பொதுக்கல்வி
கே. எம். ஷாஜி – உள்ளாட்சி
பி. கே. பஷீர் – பொதுப்பணித்துறை
வி. இ. அப்துல் கபூர் – மீன்வளம், சமூக நீதி.
மோன்ஸ் ஜோசப் – நீர்ப்பாசனம், வீட்டு வசதி.
அனூப் ஜேக்கப் – உணவு மற்றும் குடிமைப் பொருள் வழங்கல்.
ஷிபு பேபி ஜான் – வனம்
சி. பி. ஜான்- போக்குவரத்து.
அதிவேக ரயில் பாதை திட்டம் ரத்து
கேரள அமைச்சரவை கூட்டம் நேற்று திருவனந்தபுரத்தில் நடைபெற்றது. அதன் பின் முதல்வர் வி.டி.சதீசன் நிருபர்களிடம் கூறியது: கடந்த இடதுசாரி கூட்டணி அரசு கேரளத்தில் அமல்படுத்த தீர்மானித்திருந்த சில்வர் லைன் அதிவேக ரயில் பாதை திட்டத்தை ரத்து செய்ய அமைச்சரவை கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது. இந்தத் திட்டத்திற்காக கேரளத்தில் பல்வேறு பகுதிகளில் நிலம் கையகப்படுத்தப்பட்டிருந்தது. பொதுமக்களின் கடும் எதிர்ப்பு காரணமாக கடந்த அரசு இந்த திட்டத்தை கைவிட்டது. ஆனால் இதற்கான உத்தரவை முந்தைய அரசு பிறப்பிக்கவில்லை.
இதன் காரணமாக கையகப்படுத்தப்பட்ட நிலத்தை பொதுமக்கள் விற்கவோ வங்கிகளில் அடமானம் வைக்கவோ முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் தான் காங்கிரஸ் அரசு இந்த திட்டத்தை ரத்து செய்து உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்தத் திட்டத்தை எதிர்த்து போராட்டம் நடத்திய பொதுமக்கள் மீது பதிவு செய்யப்பட்ட வழக்குகள் ரத்து செய்யப்படும். இயற்கை மற்றும் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பில்லாத வகையில் புதிய அதிவேக ரயில் பாதை திட்டம் குறித்து ஆலோசிக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
